டெலிகேட் பொஷிஷன்.. எந்த கட்சியை ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் அழைக்க வேண்டும்? சட்டம் சொல்வது இதுதான்!
Recommended Video
பெங்களூர்: கர்நாடக அரசியல் ஒரு பரபரப்பான கட்டத்தில் வந்து நின்றுள்ளது. விக்ரமாதித்யனிடம் வேதாளம் கேட்கும், தர்க்க ரீதியான தவிர்க்க முடியாத கேள்விகளை போன்ற கேள்விகள் இப்போது கர்நாடக ஆளுநர் முன்பாக நிற்கிறது.
இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார், மாநிலத்தின் அரசியல் சாசன பாதுகாவலர் என்ற போற்றுதலுக்கு உரிய ஆளுநராக உள்ள வஜுபாய் வாலா.
ஆர்எஸ்எஸ்காரராக இருக்கலாம், பாஜகவின் அமைச்சராக இருந்திருக்கலாம், மோடிக்காக தான் போட்டியிடும் தொகுதியையே கூட விட்டுக்கொடுத்தவராக இருக்கலாம், அதெல்லாம், இப்போது அவசியமற்றது.
அரசியல் சாசன பாதுகாவலர்
இன்று, வஜுபாய் வாலா என்பவர் தனி நபர் இல்லை. அவர் அம்மாநிலத்தின், ஆறரை கோடி மக்களுக்குமான அரசியல் சாசன பாதுகாவலர். அவர் சட்டப்படியும், அரசியல் சாசனப்படியுமே பயணிக்க வேண்டிய பாதையில் இருப்பவர். இது கோவா மாதிரி குட்டி மாநிலம் அல்ல. இந்தியாவின் டாப் 7 பெரிய மாநிலங்களுக்குள் ஒன்று. இங்கே நடைபெறும் சிறு அசைவும் தேசம் முழுக்க கவனிக்கப்படும். பெங்களூரின் புண்ணியத்தால், உலகம் முழுக்க கூட இது கவனிக்கப்படுகிறது.
சட்ட வல்லுநர்கள் கருத்து
இப்படி ஒரு முக்கிய காலகட்டத்தில் ஆளுநர் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்தோம். அவர்கள் கூறியது: இப்போது கவர்னர் முன்பு இரு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று, தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் அல்லது, கூட்டணியின் மூலம், சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ்-மஜத கூட்டணியை அழைக்க வேண்டும்.
தர்ம சங்கடம்
இதுதான் தர்ம சங்கடமான சூழல். இதில் எந்த தரப்பை ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் முதலில் அழைக்க வேண்டும் என்பதில்தான் ஆளுநரின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது. அப்போது, இதுபோன்ற அரசியல் சாசன சிக்கல்களின்போதெல்லாம் பொம்மை வழக்குதான் கை காட்டப்படும். அதன்படியே இந்த பிரச்சினையையும் அணுகலாம்.
பொம்மை வழக்கு
பொம்மை வழக்கில் கூறப்பட்டுள்ள தீர்ப்புபடி, எந்த ஒரு கட்சிக்கும் தனித்து பெரும்பான்மை அமைக்க பலம் இல்லாதபோது, 1) தேர்தலுக்கு முன்பாக கூட்டணி வைத்து அதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ள கட்சிகளை ஆட்சியமைக்க ஆளுநர் முதலில் அழைக்க வேண்டும். 2) தேர்தலுக்கு முன்பு கூட்டணி இல்லாவிட்டால், பிறகு கூட்டணி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ள கட்சியை அழைக்க வேண்டும். 3) அவர்களும் ஆட்சியமைக்க போதிய பலத்தோடு இல்லை என்றால், அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியவில்லை என்றால், தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.
பாஜகவுக்கு உரிமையில்லை
இதன் அடிப்படையில் பார்த்தால், கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை பலம் பெறவில்லை. தேர்தலுக்கு பின்பு கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ்-மஜதவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது (வெற்றி பெற்ற தொகுதிகள், அடிப்படையில்). எனவே மஜத-காங்கிரஸ் கூட்டணியைத்தான் ஆளுநர் முதலில் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். மேலும், சமீபத்தில் வெளியான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் கூட இதையே வலியுறுத்துகிறது. இவ்வாறு சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.