ஒரு வாரத்தில் தேர்தல்.. முடிவை நிர்ணயிக்கும் கர்நாடக தமிழர் வாக்குகள் எந்த கட்சிக்கு தெரியுமா?
காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தமிழரைத் தேர்தலில் நிறுத்தியுள்ளதால், அக் கட்சிகளுக்கு வாக்களிக்க தமிழர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அங்குள்ள தமிழர்கள் வாக்குகள் எந்த கட்சிக்கு போகப்போகிறது என்ற கேள்வி அனைத்து அரசியல் கட்சிகளையும் துளைத்து எடுத்து வருகிறது.
சுமார் 1 கோடி மக்கள் தொகையை எட்ட உள்ள கர்நாடக தலைநகர் பெங்களூரில் மட்டும் சுமார் 30 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆம், 30 சதவீத மக்கள் தமிழர்கள்தான். பல தலைமுறைகளாக வசிப்போர், சமீபத்தில் குடியேறியோர் என எல்லோரும் இதில் வருவார்கள்.
கர்நாடக சட்டசபை பலம் 224 தொகுதிகள். இதில், பெங்களூர் நகருக்குள் மட்டும், 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
தமிழர்கள் கையில் துருப்பு சீட்டு
சாந்திநகர், காந்திநகர், சிவாஜிநகர், புலிகேசிநகர், சர்வக்ஞநகர், விஜயநகர், கோவிந்த்ராஜ்நகர், மகாலட்சுமிலேஅவுட், பேட்ராயன்புரா, பிடிஎம் லேஅவுட், ராஜாஜி நகர், சர்.சி.வி.ராமன்நகர், சிக்பேட், ஜெயநகர், ராஜராஜேஸ்வரிநகர், சாமராஜ்பேட் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி தோல்விகள் தமிழர்கள்தான் நிர்ணயிக்கின்றனர் என்று அடித்து கூற முடியும்.
கர்நாடக தொகுதிகள்
இதேபோல, கோலார் மாவட்டத்திலுள்ள தங்கவயல், ஹனூர், கொள்ளேகால், குண்டல்பேட்டை, கிருஷ்ணராஜா, நரசிம்மராஜா, மைசூரு, சித்தராமையா போட்டியிடும், சாமுண்டீஸ்வரி, வருணா, சாமராஜ்நகர், ஹாசன், ஷிமோகா, எடியூரப்பா போட்டியிடும் ஷிகாரிபுரா, தாவணகெரே, பங்கார்பேட்டை, மண்டியா, தும்கூரு, பத்ராவதி, சாகர், ஆனேக்கல் போன்ற சுமார் 50 தொகுதிகளில் வேட்பாளர்களில் வெற்றியை முடிவு செய்யும் அளவுக்கு தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
மலையாளிகள் லாபி
கர்நாடகத்தில் மொத்தம், சுமார் 90 லட்சத்திற்கு மேற்பட்டதமிழர்கள் வாழ்ந்துவருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், கர்நாடகத்தில் வாழும் பிற மொழிச் சிறுபான்மையினர்களான தெலுங்கர்கள், மராட்டியர்கள் அளவுக்கு அவ்வளவு ஏன் எண்ணிக்கையில் குறைந்த, மலையாளிகள் பெற்றுள்ள அரசியல் அங்கீகாரம் கூட தமிழர்களுக்கு கடந்த 70 ஆண்டுகளாக கிடைக்கவே இல்லை. தமிழர்கள் பொதுவாக பெரிய கட்சிகளின் கூட்டங்களுக்கு பிரியாணி பொட்டலத்திற்காக அழைத்துச் செல்லப்படும் அளவில்தான் உள்ளனரே தவிர லாபி செய்து தங்களுக்கான உரிமைகளை பெறும் கம்பீரமான இடத்தில் இல்லை என்பது கசப்பான உண்மை.
இதுவரை 14 எம்எல்ஏக்கள்
கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு, திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் சி.எம்.ஆறுமுகம், எம்.சி.நரசிம்மன், கிரேஸ் டக்கர், எஸ்.ராஜகோபால், எம்.ஏ.அமலோற்பவம், டி.பூசலிங்கம், பி.கே.ரங்கநாதன், மு.பக்தவத்சலம், டி.எஸ்.மணி, சி.கண்ணன், எம்.முனுசாமி, எஸ்.ராஜேந்திரன், டி.ஜி.ஹேமாவதி, ஜே.அலெக்சாண்டர் ஆகிய 14 பேர் மட்டுமே சட்டசபை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை
பாஜக, மஜத, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் கர்நாடக தமிழர்களை கண்டுகொள்ளாமலே இருந்துவிட்டன. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் கர்நாடகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிலும், கடந்த சில தேர்தல்களாக சுத்தமாகவே தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், 18 ஆண்டுகளாக பெங்களூரில் மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையை கன்னடர்கள் எதிர்ப்பை மீறி துணிச்சலாக 2009ல் திறந்து வைத்தார் அப்போதைய பாஜக முதல்வர் எடியூரப்பா.
அலையாக திரும்பிய தமிழர்கள்
எடியூரப்பாவின் தமிழர் ஆதரவு துணிச்சலான முடிவால் மகிழ்ந்த தமிழர்கள், 2010ல் நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு மனமுவந்து வாக்குகளை அள்ளி கொடுத்தனர். தமிழர்கள் ஒரே கட்சி பக்கம் அலை போல திரும்பியது சமீபகால கர்நாடக அரசியல் வரலாற்றில் அதுதான் முதல் முறையாகும். இதனால்தான் முதல் முறையாக பெங்களூர் மாநகராட்சியை பாஜக அப்போது கைப்பற்றியது.
காங்கிரஸ் பக்கம் இருந்த தமிழர்களை ஒரேயடியாக பாஜக பக்கம் திருப்பியவர் எடியூரப்பா. எந்த ஒரு கலவரத்தின்போதும் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்துவிடாமல் அவரது ஆட்சியில் தடுத்தார்.
வாக்குகளை உடைத்த எடியூரப்பா
ஆனால் பாஜக உட்கட்சி பிரச்சினையால் எடியூரப்பாவே பாஜகைவிட்டு வெளியேறினார். கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி துவங்கினார்.
இதனால் தமிழர்கள் வாக்குகள் சிதற ஆரம்பித்தன. இதை பயன்படுத்தி காங்கிரசின் பெங்களூர் நகர எம்எல்ஏக்கள் பலரும் தமிழர்களை தங்கள் வாக்கு வங்கிகளாக ஈர்க்க என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்தனர். இப்போது எடியூரப்பா பாஜகவின் முதல்வர் வேட்பாளர். ஆனால் தமிழர்கள் வாக்குகளோ, காங்கிரஸ், பாஜக என பிரிந்து விட்டது. சம்பத் ராஜ் என்ற தமிழ் கவுன்சிலரை சித்தராமையா அரசு பெங்களூர் மேயராக்க முன்வந்ததும், தற்போது சி.வி.ராமன் நகர் தொகுதியில் அவருக்கு போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுத்துள்ளதும், தமிழர்களை எடியூரப்பாவிலிருந்து சித்தராமையா நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ளது. பாஜகவில் இந்த தேர்தலில் ஒரு தமிழருக்கும் சீட் கொடுக்காததும் இதற்கு ஒரு காரணம்.
காங்கிரசில் தமிழ் வேட்பாளர்
இந்த நிலையில்தான், கர்நாடக சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது. மே 12ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத் தமிழர்களின் வாக்கு யாருக்குச் செல்லும்? என்பது கர்நாடக அரசியல் கட்சிகளிடையே கடும் விவாத பொருளாகியுள்ளது. 14 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் உள்ள ஒரு தொகுதியில் தமிழர் ஒருவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது.
மதசார்பற்ற ஜனதாதளத்திலும் தமிழர்
அதேநேரம், கன்னடர், ஒக்கலிகர் என அரசியல் நடத்தி வரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி, தங்கவயல் தொகுதியில் தமிழரான மு.பக்தவத்சலத்திற்கு சீட் கொடுத்து அசத்தியுள்ளது. சுமார் 70 சதவீதம் தமிழர்கள் வாழும் தங்கவயலில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழர் ஒருவர் எம்எல்ஏவாக முடியவில்லையே என்ற ஆதங்கம் உள்ளது.
எடியூரப்பா, காங்கிரஸ், மஜத
காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தமிழரைத் தேர்தலில் நிறுத்தியுள்ளதால், அக் கட்சிகளுக்கு வாக்களிக்க தமிழர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். பாஜக தமிழருக்கு சீட் கொடுக்கவில்லை என்றபோதிலும், எடியூரப்பா என்ற தனி நபரின் தமிழர் ஆதரவு நடவடிக்கைகள் காரணமாக ஈர்ப்பு கொண்ட தமிழர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கும் எண்ணத்திலும் உள்ளனர். எனவே, இம்முறை தமிழர்களின் வாக்கு ஒரே கட்சிக்குச் செல்லாமல், காங்கிரஸ், மஜத மற்றும் பாஜகவுக்கு பிரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.