குஜராத்தில் பாஜகவுக்கு மெகா வெற்றி.. காங். நிலை ரொம்பவே பாவம்! உள்ளே புகுந்த ஆம் ஆத்மி.. புதிய சர்வே
காந்திநகர்: குஜராத்தில் நாளை மறுதினம் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஏபிபி- சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
குஜராத்தில் இப்போது புபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே 182 இடங்களைக் கொண்ட குஜராத்திற்கு சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
டிச. 1, 5 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து டிச. 8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரமும் ஓய்ந்துள்ளது.
குஜராத் தேர்தல் வேட்பாளர்களில்.. 330 பேர் கிரிமினல்கள்.. ஷாக் ரிப்போர்ட்.. எந்த கட்சி டாப் தெரியுமா?
குஜராத்
குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவே ஆட்சியில் உள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. மேலும், குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. அதேநேரம் கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்ற காங்கிரஸ் கடும் போட்டியைத் தரும் முனைப்பில் இறங்குகிறது. இதற்கு நடுவே பஞ்சாபில் கிடைத்த தெம்புடன் குஜராத்திலும் கணக்கை ஓபன் செய்யும் முயற்சியில் ஆம் ஆத்மி இறங்குகிறது.
ஆம் ஆத்மி
அக்கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் மிகத் தீவிரமான பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இருப்பினும் பஞ்சாபைப் போலக் குஜராத்தில் கால்பதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கிடையே குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்து ஏபிபி- சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் பாஜகவுக்கு மிகப் பெரியளவில் வெற்றி கிடைக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. அதேபோல காங்கிரஸ் தனது கைவசம் உள்ள இடங்களை இழக்கும் என்றும் ஆம் ஆத்மி தனது கணக்கைத் தொடங்கும்.
பாஜகவுக்குப் பெரிய வெற்றி
குஜராத்தில் மொத்தம் 182 இடங்கள் உள்ள நிலையில், அதில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பாஜக வெல்லும் என இதில் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக சுமார் 134 முதல் 142 இடங்களில் வெல்லும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், சுமார் 30-40 இடங்களைக் கூடுதலாக வெல்லும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டு உள்ளது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி
காங்கிரஸ் கட்சி தான் இதில் அதிகப்படியான இடங்களை இழக்குமாம். காங்கிரஸ் கடந்த 2017இல் 77 இடங்களில் வென்றிருந்த நிலையில், இந்த முறை வெறும் 28 முதல் 36 இடங்களில் மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. தனித்துக் களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி இந்த முறை 7 முதல் 15 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. காங்கிரஸ் வசம் இருக்கும் இடங்களே பெரும்பாலும் ஆம் ஆத்மிக்கு செல்கிறது. அதேபோல இதர கட்சிகள் அதிகபட்சம் இரண்டு இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது.
வாக்கு சதவீகிதம்
வாக்கு சதவிகித அடிப்படையில் பாஜகவுக்கு அதிகபட்சம் 45.9 சதவீதம் கிடைக்கும். இது கடந்த 2017இல் வாங்கிய 49.1 சதவீதத்தை விட 3.2% குறைவாகும். காங்கிரஸ் கடந்த தேர்தலில் 41% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்த முறை வெறும் 26.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் வாக்கு வங்கி சுமார் 14% சரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாகக் களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி இந்தத் தேர்தலில் 21.2% வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
பிராந்தியங்கள்
பிராந்திய வாரியாக பார்க்கும் போது 61 இடங்களைக் கொண்டிருக்கும் மத்திய குஜராத்தில் பாஜக 45-49, காங்கிரஸ் 10-14 இடங்களைப் பெறும். 54 இடங்களைக் கொண்ட சவுராஷ்டிரா-கட்ச் பகுதிகளில் பாஜக 38-42 இடங்களையும், காங்கிரஸ் வெறும் 4-8 இடங்களையும், ஆம் ஆத்மி 7-9 இடங்களையும் பெற வாய்ப்புள்ளது. தெற்கு குஜராத்தில் (மொத்தம் 35 இடங்கள்) பாஜக 27-31 இடங்களும், காங்கிரஸ் 2-6 இடங்களும் கிடைக்கும். 32 இடங்களைக் கொண்ட வடக்கு குஜராத்தில் பாஜக 24 இடங்களிலும், காங்கிரஸ் 8-12 இடங்களைப் பெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளன.