பெங்களூர் புறநகரை மிரட்டும் சிறுத்தை.. விடிய விடிய தூங்காமல் தவித்த மக்கள்!
பெங்களூர்: பெங்களூரின் புறநகர் பகுதியான ஒயிட்பீல்டு அருகே உள்ள வர்த்தூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் இரவுப் பொழுதை பயத்திலேயே கழிக்கிறார்கள்.
பெங்களூரின் புறநகர் பகுதியான ஒயிட்பீல்டு அருகே உள்ள வர்த்தூரில் இருக்கும் விப்ஜியார் பள்ளி வளாகத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை ஒன்று புகுந்தது. அதை வனத்துறையினர் 12 மணிநேரம் போராடி பிடித்தனர்.
சிறுத்தையை பிடிக்கையில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் அந்த பள்ளி அருகே சிறுத்தை நடமாடியதை அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
விடுமுறை
வனத்துறையினர் இரவு முழுவதும் தேடியும் சிறுத்தை சிக்கவில்லை. இந்நிலையில் ஒயிட்பீல்டு, வர்த்தூர், மாரத்தஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 129 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அச்சம்
சிறுத்தை நடமாட்டத்தை பார்த்ததில் இருந்து வர்த்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
காவலாளிகள்
வர்த்தூர் அருகே உள்ள பனத்தூரில் இருக்கும் அபார்ட்மென்ட் காம்பிளக்ஸில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், இரவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செல்ல பயமாக உள்ளது. அபார்ட்மென்ட் வளாகத்திற்குள் கூட நடக்க பயமாக உள்ளது. காவலாளிகள் கூடுதல் மின் விளக்குகளை பயன்படுத்துவதுடன் இரவு முழுவதும் ரோந்து வந்து விசில் அடிக்கிறார்கள் என்றார்.
குழந்தைகள்
வர்த்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்போர் தங்களின் குழந்தைகளை இருட்டிவிட்டால் வெளியே அனுப்புவது இல்லை. ஆங்காங்கே கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் இரவுப் பொழுதை பயத்தில் கழிக்கிறார்கள்.