சமூக புரட்சிக்கு விதைபோட்ட 'லிங்காயத்துகள்' வரலாறு இதுதான்! புதிய மதமானது இப்படித்தான்!!
Recommended Video
பெங்களூர்: லிங்காயத்து ஜாதி பிரிவினரை தனி மதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை எடுத்துள்ள முடிவு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவபெருமானை மட்டுமே வணங்கக்கூடியவர்கள் லிங்காயத்துகள். அவர்களை எப்படி தனி மதமாக அங்கீகாரம் செய்யப்பட முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
ஆனால், இதை ஒரு ஜாதி பிரிவு என்று பார்ப்பதைவிட இதுவரை அவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவு, அதாவது லிங்காயத்து என்பதே ஒரு மதமாகத்தான் அனுசரிக்கப்பட்டு வந்தது என்பதை உணர வேண்டியது அவசியம்.
தோன்றினார் பசவண்ணர்
தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருந்த காலகட்டம் அது. தீண்டாமை தலை விரித்தாடியது. அப்போதுதான் 12ம் நூற்றாண்டில் அந்த ஞானி தோன்றினார். பசவண்ணர் என்ற அந்த புரட்சியாளர், இந்தியா கண்ட முக்கியமான புரட்சியாளர்களில் ஒருவர். 'காயகமே கைலாயா' என்று அவர் கோஷத்தை முன்வைத்தபோது, தீண்டத்தாகதவர் என்று ஒதுக்கப்பட்ட ஜாதியினர் அவரின் அடிதொற்றி ஒன்று திரண்டனர். உன் உடல் என் உடலை தொட்டால் தீட்டு என சொன்ன 'மேல்ஜாதியினர்' ஆதிக்கத்திற்கு நடுவே, ஊனுடம்பே கைலாசம் (காயகவே கைலாசா) என்று பசவண்ணர் சொன்னார்.
உடலே கைலாயம்
உடலே சிவன் வாழும் கைலாயம் எனும்போது, அப்புறம் மேலென்ன கீழென்ன. அனைவருமே நடமாடும் கோயில்கள்தானே. இப்படித்தான் துவண்டு கிடந்த மனங்களில் நம்பிக்கையை விதைத்தார் பசவண்ணர். எனது கோயிலுக்குள் வராதே என்று அவர்கள் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது. கோயில் உன் உடல்தான். அதில் லிங்கத்தை பிரதிஷ்டை செய் என்று சொல்லிக்கொடுத்தார்.
பல ஜாதியினரும் இணைந்தனர்
தலித்துக்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என பல ஜாதியினரும், பசவண்ணர் காட்டிய வழியில் ஒன்றிணைந்தனர். மனதை அடக்கிவிட்டதுதான் பூணுல் தரிப்பதற்கு அடையாளம் எனில், நீங்களும் பக்தியால் மனதை கட்டுங்கள். புலால் உண்ணாதீர்கள். நீங்களும் அந்த 'மேல்ஜாதியினராக' மாறிவிடலாமே என்று அவர் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். பல ஜாதியினரும் லிங்கத்தை தரித்து லிங்காயத்து என்ற குடையின் கீழ் இணைந்தனர். அப்படித்தான் உருவாகியது லிங்காயத்து பிரிவு.
ஜாதி மாற முடியும்
இன்றும்கூட எந்த ஜாதியினராக இருந்தாலும், லிங்கத்தை கழுத்தில் தரித்து லிங்காயத்தாகலாம். தும்கூரிலுள்ள சித்தகங்கா உட்பட முக்கியமான 5 மடங்கள் கர்நாடகாவில் இந்த சேவையை இப்போதும் செய்து வருகின்றன. பூஜை, உணவு முறை உள்ளிட்ட பலவற்றிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. பிராமணர்களை போன்றே அனைத்து விஷயங்களிலும் இவர்கள் செயல்படுவார்கள். ஆனால், சிவனை தவிர வேறு தெய்வங்களை வணங்குவதில்லை. மடாதிபதிகள் இவர்களுக்கு தெய்வத்திற்கு சமமானவர்கள். கர்நாடகாவின் மெஜாரிட்டி பிரிவினர் இவர்கள்தான். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற பாஜகவின் முக்கிய தலைவர்கள் லிங்காயத்துக்கள்தான்.
வீர சைவர்கள்
லிங்காயத்துகளில் வீர சைவர்கள் என்ற ஒரு பிரிவும் உள்ளது. பசவண்ணர் லிங்காயத்து என ஒரு பிரிவை ஆரம்பிக்கும் முன்பாக இருந்தே சிவனை மட்டுமே வணங்கிவருபவர்கள் வீர சைவர்கள். இவர்கள் பசவண்ணர் சிவனை வணங்க கூறியதால், லிங்காயத்துகளில் ஒருவர்களாக மாறிக்கொண்டனர். இருப்பினும் பசவண்ணர் போதனைகளை ஏற்பவர்களுக்கும், வீரசைவர்களுக்கும் அடிப்படையில் சில வித்தியாசங்கள் உள்ளன. பசவண்ணர், கடவுள் வழிபாட்டில் சடங்கு, சம்பிரதாயம் வேண்டாம் என்றார். சிவன் என்று கூறினாலும், அதை உருவ வழிபாட்டோடு தொடர்புபடுத்தவில்லை. ஆனால், வீர சைவர்கள் தங்களது உறுப்புகளை கூட வெட்டி எடுத்து, சிவனுக்கு சமர்ப்பணம் செய்ய துணிபவர்கள். இந்து மதத்தில் கூறியுள்ளபடியான சிவ வழிபாடுகளை செய்பவர்கள்.
லிங்காயத்துகளில் இதுபோல மேலும் பல பிரிவினரும் உள்ளனர். தேர்தல் நேரத்தில், கர்நாடக அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் லிங்காயத்துகளே மிக முக்கியமானவர்கள்.