யார் இந்த ஆனந்திபென் பட்டேல்?
அகமதாபாத்: குஜராத்தின் அடுத்த முதல்வர் ஆனந்திபென் பட்டேலும் மோடியும் ஒரே பள்ளிக் கூடத்தில் படித்தவர்கள்.
நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் குஜராத் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த பதவிக்கு மூத்த அமைச்சரான ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆனந்திபென் பட்டேல் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
விவசாய குடும்பம்
குஜராத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த ஆனந்திபென் பட்டேல் 4வது வரை மெஹ்சானா மாவட்ட மகளிர் பள்ளியில் படித்தார். அவரது பள்ளியில் 5வது வகுப்பு இல்லாததால் ஆண்கள் பள்ளியில் சேர்ந்து படித்தார்.
மோடியும்
மோடியும், ஆனந்திபென் பட்டேலும் மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் உள்ள என்.எம். உயர் நிலைப்பள்ளியில் படித்தவர்கள்.
தலைமை ஆசிரியை
பள்ளி, கல்லூரி படிப்பை முடிந்த ஆனந்திபென் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்றார்.
வீர மங்கை
1987ம் ஆண்டு பள்ளியில் இருந்து சுற்றுலா சென்றபோது 2 மாணவிகள் சர்தார் சரோவர் நீர்த்தேக்கத்தில் விழுந்துவிட்டனர். இதை பார்த்த ஆசிரியையான ஆனந்தி உடனே நீர்த்தேக்கத்தில் குதித்து அவர்களை காப்பாற்றினார். அவரின் வீர செயலை பாராட்டி மாநில அரசு விருது வழங்கி கௌரவித்தது.
அரசியல்
ஆனந்திபென்னுக்கு 46 வயது இருக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாஜகவுக்கு வந்த 37 வயது மோடி அவரை அணுகி அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அரசியலுக்கு வர தயங்கிய ஆனந்தியை அவரது கணவர் பேராசிரியரான மபாத்பாய் தான் தைரியம் கூறி அனுப்பி வைத்தவர்.
பாஜக
மோடி குஜராத் மாநில பாஜக பொதுச் செயலாளர் ஆனபோது அவர் ஆனந்திபென்னை கட்சியின் மஹிலா மோர்சா தலைவர் ஆக்கினார். மோடியின் ஆதரவில் அரசியலில் வளர்ந்த ஆனந்திபென் 1994ம் ஆண்டில் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
எம்.எல்.ஏ.
குஜராத்தில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் எம்.எல்.ஏ. ஆனந்திபென் பட்டேல் தான். அவர் கேஷுபாய் பட்டேல் மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ளார்.
மோடிக்கு ஆதரவு
1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு மோடிக்கு பாஜகவில் பிரச்சனை ஏற்பட்டபோது கூட ஆனந்திபென் அவருக்கு ஆதரவாக இருந்தார்.
முதல்வர்
ஆனந்திபென் பட்டேல் குஜராத் முதல்வராக பதவியேற்றால் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெறுவார்.