4 பேரில் தனி ஒருவனாக திகழ்ந்து முதல்வராக தேர்வு.. யார் இந்த பூபேஷ் பாகல்?
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 ஆண்டு கால பாஜக அரசை முடிவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. இக்கட்சியின் சார்பில் சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நக்ஸல் ஆதிக்கம் நிலவி வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அதிக தொகுதிகளை பெற்றது. இந்த மாநிலத்தின் முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார்.
பெரும் குழப்பம் தீர்ந்தது.. சட்டீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு!
அதன் பேரில் முதல்வர் ரேசில் 4 பேர் இருந்தனர். அவர்களுள் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல், அம்பிகாபூர் எம்பி டிஎஸ் சிங் தேவ், கட்சியின் ஓபிசி பிரிவின் தலைவர் தம்ரத்வாஜ் சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சந்திரதாஸ் மஹந்த் ஆகியோர் ஆவர்.
இவர்கள் 4 பேரில் சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டார். இவர் அந்த மாநிலத்தின் 3-ஆவது முதல்வர் ஆவார். இவர் பதான் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் ஆன்மிக குரு சுவாமி ஆத்மானந்தாவின் உறவினர் ஆவார். இவர் தனது அரசியல் குருவான மறைந்த சந்துலால் சந்த்ராகரின் வழிகாட்டுதல்படி கடந்த 80 களில் அரசியலுக்கு வந்தார்.
1993 மற்றும் 1998-இல் ம.பி.யின் பதான் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். திக் விஜய் சிங்கின் அமைச்சரவையில் மாநில அமைச்சராக பொறுப்பேற்றார். சத்தீஸ்கர் மாநிலம் உருவான பிறகு வருவாய், பொது சுகாதாரம் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அமைச்சராக பாகல் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராவார்.