துப்பாக்கி விஜய் பாணியில், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பினிஷ் செய்த சோட்டா ராஜன்!
மும்பை: துப்பாக்கி திரைப்படத்தில், ஹீரோ விஜய், மும்பையில் குண்டுவெடிப்பு நடத்தும் தீவிரவாதிகளை திட்டமிட்டு தீர்த்துக்கட்டுவார். அந்த படத்தின் இன்ஸ்பிரேஷன், சோட்டா ராஜனின் வாழ்க்கைதான் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் நிழலுலக தாதாவாக அறியப்படும் சோட்டா ராஜனும், மும்பை மக்களை கொன்றொழிக்க கிளம்பிய தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக அதே வழியை பின்பற்றி தடுத்துள்ளாராம்.
சோட்டா ராஜனின் இயற்பெயர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. மும்பை செம்பூரில் 1960ம் ஆண்டு பிறந்த இவர் 10 வயதிலேயே கிரிமினலாக மாறியவர். 1970ம் ஆண்டுகளில் சினிமா தியேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்பவராக இருந்தார்.
ரவுடி நட்பு
அந்த கால கட்டத்தில் திலக் நகரில் பெரும் ரவுடியாக இருந்த ராஜன் நாயரிடம் இவருக்கு நட்பு ஏற்பட்டது. நாயரின் வலதுகரமாக மாறினார். இதனால் ராஜன் நாயர் படா (பெரிய) ராஜன் என்றும் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி சோட்டா (சிறிய) ராஜன் என்றும் அழைக்கப்பட்டனர்.
தாவூத்தின் வலது கரம்
ராஜன் நாயர் எதிரிகளால் தீர்த்துக்கட்டப்பட்ட பிறகு, அந்த சாம்ராஜ்யத்தை சோட்டா ராஜன் கவனித்தார். நாளடைவில் மும்பையை கலக்கிக்கொண்டிருந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன், சோட்டா ராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு இப்ராஹிமின் வலது கரமாக சோட்டாராஜன் மாறினார்.
தாவூத்துடன் தப்பியோட்டம்
1980ம் ஆண்டுகளில், மும்பை போலீசார் தாவூத் இப்ராஹிம் கும்பலை என்கவுன்டர் செய்ய தொடங்கினர். இதனால் தாவூத் இப்ராஹிம் துபாய்க்கு தப்பியோடினார். சோட்டா ராஜனையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். வெளிநாடுகளில் இருந்தபடி தாவூத் கோஷ்டியில் வலதுகரமாக சோட்டா ராஜன் செயல்பட்டு வந்தார்.
குண்டுவெடிப்பால் கோபம்
பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்குவதாக கூறி, 1993ம் ஆண்டு மும்பையில் பொது இடங்களில் தாவூத் இப்ராஹிம் கும்பல் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது. இதனால் தாவூத் இப்ராஹிம் மீது சோட்டா ராஜனுக்கு வெறுப்பு ஏற்பட்டது.
சாம்ராஜ்யம்
இதையடுத்து, தாவூத்திடமிருந்து பிரிந்து செல்ல திட்டமிட்டு காய் நகர்த்திய சோட்டா ராஜன், 1996ல் தாவூத்தை பிரிந்து தனக்கென்று சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். உலகம் முழுவதும் ஆள் கடத்தல், ஆயுதம் கடத்தல், போதை பொருட்கள் கடத்தல் ஆகியவற்றில் சோட்டா ராஜன் குழு ஈடுபட்டது.
தாவூத் திட்டம்
இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உள்பட நாடுகளில் பினாமி பெயர்களில் டிஸ்கோ இரவு விடுதிகளையும் சோட்டா ராஜன் நடத்தினார். இதனால் தாவூத்தின் வருவாய் பாதிக்கப்பட்டது. மரியாதையும் குறைந்துவிட்டது.
எனவே சோட்டா ராஜனை கொல்ல தாவூத் இப்ராஹிம் முயற்சி செய்தார்.
6 பேர் பினிஷ்
தன்னை தாவூத் கொலை செய்ய திட்டமிட்டதை அறிந்ததும், பதிலடி கொடுக்க ஸ்கெட்ச் போட்டார் சோட்டா ராஜன். மும்பையில் இருந்த இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளிகள் 6 பேரை அடுத்தடுத்து கொன்று வீசினார். இதில் கவனிக்க வேண்டியது, அந்த 6 பேரும் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கான முக்கிய பங்காளிகளாகும். போலீசார் அவர்களை கைது செய்யும் முன்பே, சோட்டா ராஜன் மரண தண்டனை விதித்துவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசப்பற்று தாதா
குண்டுவெடிப்பு குற்றவாளிகளை கொலை செய்ததால், மும்பை மக்கள் சோட்டா ராஜனை ‘‘தேசப்பற்று மிக்க நிழல் உலக தாதா'' என்று அழைக்கிறார்கள். ஏனெனில் மும்பையில் இவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எந்த ஒரு கிரிமினல் சதி செயல்களில் ஈடுபட்டதில்லை. அதே நேரம், மும்பையில் அமைதியை சீர்குலைத்தவர்களை இவர் தீர்த்து கட்டியதாக சொல்கிறார்கள்.
இன்டர்போல் உதவி
மொத்தம் 20க்கும் மேற்பட்ட கொலைகளை சோட்டாராஜன் நடத்தியதாக கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை 1994ல் இந்தியா நாடியது. இதை அறிந்ததும் அவர் பல்வேறு பெயர்களில் நாடு, நாடாக ஓடிக்கொண்டிருந்தார்.
தப்பிய சோட்டா
1998ல் தாய்லாந்து போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் போலீஸ் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடி விட்டார். 2000ம் ஆண்டு பாங்காங்கில் இருந்த அவரை தாவூத் இப்ராகிம் கோஷ்டியைச் சேர்ந்த சோட்டா ஷகீல் கொல்ல முயன்றார். அப்போது சோட்டா ராஜன் உயிர் தப்பினார். அதே ஆண்டு அவர் மீது மீண்டும் தாக்குதல் நடந்தது. அப்போதும் அவர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினார்.
கிட்னி பாதிப்பு
2010ம் ஆண்டு சோட்டா ராஜனுக்கு கிட்னி பாதிக்கப்பட்டது. இதனால் அவர் அடிக்கடி டயலிசிஸ் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்கியதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் மூலம், தாவூத் இப்ராஹிமுக்கு தகவல் போய்விடும் என்பதை அறிந்த சோட்டா ராஜன் இந்திய சிறையில் இருப்பதே பாதுகாப்பு என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
3 மகள்கள்
சோட்டா ராஜன் மீது மொத்தம் 68 பல்வேறு வழக்குகள் உள்ளன. நேபாளம் நாட்டில் அவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் மும்பை மாநகர போலீசில்தான் பதிவாகி உள்ளது. சோட்டா ராஜனுக்கு சுஜாதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.
படித்த குடும்பம்
சோட்டா ராஜன் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டாலும் தனது 3 மகள்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார். அவரது மூத்த மகள் இங்கிலாந்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவரது இரண்டாவது மகள் என்ஜினீயராக இருக்கிறார். சோட்டா ராஜனுடன் பிறந்த சகோதரர்கள் தற்போதும் செம்பூரில் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார்கள்.
திரைப்படங்கள்
சோட்டா ராஜனின் இந்த வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு ஹிந்தியில் 'கம்பெனி', 'வாஸ்தவ' என்று இரு சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டன. கம்பெனி படத்தில் சோட்டா ராஜன் போன்ற வேடத்தில் விவேக் ஓபராய் நடித்தார். 'வாஸ்தவ' படத்தில் சோட்டா ராஜன் போன்று சஞ்சய் தத் நடித்தார்.