சிறு திருடனாக இருந்து தாவூத்துக்கே சவால்விடும் நிழலுலக தாதாவாக வளர்ந்த சோட்டா ராஜன்
மும்பை: சிறு திருடனாக இருந்த சோட்டா ராஜன், தாவுத் இப்ராஹிமுக்கே சவால்விடும் நிழலுலக தாதாவாக உருவானவர்.
மும்பையின் செம்பூர், திலக்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் நிகலஜ். சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வந்தார். சககார் சினிமாவிலும் வேலை பார்த்துள்ளார். அதன்பிறகுதான் படா ராஜன் என்ற தாதாவின் பழக்கம் இவருக்கு கிடைத்தது. கொலை, கொள்ளைகளில் ஈடுபட தொடங்கினார். படா (பெரிய) ராஜனின் சிஷ்யன் என்பதால் சோட்டா (சிறிய) ராஜன் என்ற பட்டப்பெயரை ஈட்டினார்.
படா ராஜன் எதிர் கோஷ்டியால் கொலை செய்யப்பட்டதும், அந்த இடத்துக்கு சோட்டா ராஜன் வந்தார். இதன்பிறகு மும்பையை கலக்கிய தாவூத் குரூப்புடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, சோட்டாராஜன் மற்றும் தாவூத் இடையே பிரிவினை ஏற்பட்டது. இருவரது மதமும்தான் இந்த பிரிவினைக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இதன்பிகு சோட்டா ராஜன் மற்றும் தாவூத் இருவருமே துபாய்க்கு தப்பிச்சென்றனர். குண்டுவெடிப்பு மற்றும் 15க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் சோட்டா ராஜன் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 2000வது ஆண்டில், பாங்காங் நகரில் ஒரு ஹோட்டலில் வைத்து, சோட்டா ராஜனை தீர்த்துக்கட்ட தாவூத் இப்ராஹிமின் வலதுகரமாக உள்ள சோட்டா ஷகீல் முயன்றார். ஆனால் அதில் ராஜன் தப்பினார்.
இன்டர்போல் போலீசாராலும் தேடப்பட்டு வந்தார் சோட்டா ராஜன். இந்நிலையில்தான் தற்போது இந்தோனேஷிய நாட்டின் பாலி பகுதியில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.