பெற்ற மகன், மகளை, தம்பி, தங்கை என்று பல வருடங்களாக கூறி வந்த இந்திராணி
மும்பை: 43 வயதான இந்திராணி முகர்ஜி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது முதல் கணவருக்குப் பிறந்த மகளை கொலை செய்து எரித்து காட்டில் உடலைப் போட்டு விட்டதாக கூறி இந்திராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திராணி முகர்ஜி, ஸ்டார் இந்தியா சேனலின் முன்னாள் தலைமை செயலதிகாரி பீட்டர் முகர்ஜியின் 2வது மனைவி ஆவார்.
இந்த விவகாரத்தில் இந்திராணியின் முதல் கணவர், கார் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2002ல் திருமணம்
பீட்டர் முகர்ஜியை, இந்திராணி 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இது 2வது திருமணம் ஆகும்.
இருவருக்கும் மொத்தமாக 4 பிள்ளைகள்
பீ்ட்டர் முகர்ஜிக்கும், அவரது முதல் மனைவிக்கும் ஒரு மகன் உள்ளார். இந்திராணிக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்த மகள்தான் ஷீனா. இதுதவிர மிக்கயில் போரா என்ற மகனும் உள்ளார். இந்திராணி, பீட்டர் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளனர்.
9எக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர்
2007ம் ஆண்டு பீட்டரும், இந்திராணியும் இணைந்து 9எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதன் தலைமை செயலதிகாரியாக இருக்கிறார் இந்திராணி. பீட்டர் தலைவராக இருக்கிறார்.
மகளை சகோதரியாக்கினார்
தனது முதல் கணவர் மூலம் பிறந்தவரான ஷீனாவை வெளியுலகுக்கு தனது தங்கை என்றுதான் கூறி வந்தார் இந்திராணி. ஆனால் தற்போதுதான் ஷீனா, இந்திராணியின் மகள் என்று தெரிய வந்து அனைவரும் அதிர்ந்துள்ளனர்.
குவஹாத்தியில் வளர்ந்த ஷீனா
ஷீனாவும், மிக்கயிலும் அஸ்ஸாமில் உள்ள இந்திராணியின் பெற்றோரால் வளர்க்கப்பட்டனர். இவர்களை ஒருபோதும் தனது பிள்ளைகள் என்று இந்திராணி கூறியதே இல்லை. தம்பி, தங்கை என்றுதான் கூறி வந்தார்.