மாஜி உ.பி. முதல்வர் வேட்பாளர்- மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா.. காஷ்மீர் ஆளுநரான மனோஜ் சின்ஹா
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் மனோஜ் சின்ஹா.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் ஜம்மு காஷ்மீர், லடாக் எனும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் ஜி.சி முர்மு- புதிய ஆளுநரானார் மனோஜ் சின்ஹா
புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா
அப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக முர்மு நியமிக்கப்பட்டார். தற்போது முர்மு தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதில் மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
பூமிகார் சமூகம்
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் சின்ஹா, பூமிகார் ஜாதியைச் சேர்ந்தவர். உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையினராக உள்ளனர். சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் பீகாரிலும் பூமிகார் ஜாதியினர் வலிமையாக உள்ளனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
3 முறை லோக்சபா எம்பி
1970களின் இறுதியில் பனாரஸ் ஐஐடி- ஹிந்து பல்கலைக் கழகத்தில் சிவில் இன்ஜனியரிங் படித்தார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மூலம் அரசியலுக்கு வந்தார். காஸிபூர் லோக்சபா தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.பியாக வெற்றி பெற்றவர் மனோஜ் சின்ஹா.
மோடி, அமித்ஷாவின் சகா
ரயில்வே துறை துணை இணை அமைச்சராக இருந்த மனோஜ் சின்ஹா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர். 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக மட்டுமல்லாமல் முதல்வர் வேட்பாளராகவும் எதிர்பார்க்கப்பட்டவரும் கூட. சர்ச்சைகளில் சிக்காத கிராமப்புற மக்களின் ஆதரவைப் பெற்றவர் மனோஜ் சின்ஹா என்கின்றனர் பாஜகவினர்.