ஏற்கனவே எடியூரப்பா அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் காப்பாற்றிய போப்பையா.. கர்நாடக சபாநாயகர் பின்னணி
Recommended Video
பெங்களூர்: எடியூரப்பா அரசு கோரும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உள்ள சபாநாயகர், கே.ஜி.போப்பையா ஏற்கனவே, ஒருமுறை எடியூரப்பா அரசை சில தந்திரங்கள் மூலம் காப்பாற்றியவர். இதற்காக உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டிப்புக்கு உள்ளானவர்.
எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை கூட்டியுள்ளது.
17ம் தேதி பதவியேற்ற எடியூரப்பா அரசுக்கு, ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்த நிலையில், 19ம் தேதியான இன்று, பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
போப்பையா நியமனம்
இந்த நிலையில், தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். அவர் முன்னிலையில் காலையில் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி பிரமாணம் செய்ய வேண்டும். அதன்பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பை போப்பையா நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ், மஜத தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. போப்பையாவை சபாநாயகராக நியமிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
2010 கர்நாடக நிலை
இதற்கு காரணம், 2010ல் சபாநாயகராக இருந்த போப்பையா எடியூரப்பா அரசை காப்பாற்றிய விதம்தான். 2010ல் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடந்தபோது, 11 பாஜக எம்எல்ஏக்கள், அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் இணைந்து எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை இல்லை என ஆளுநர் பரத்வாஜிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
தகுதி நீக்கம்
ஆனால், அரசுக்கு எதிராக செயல்பட்டதாக இரவோடு இரவாக 16 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு போப்பையா, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. அதிர்ச்சியடைந்த தகுதி நீக்கத்திற்கு உள்ளான எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றம் சென்றனர். விசாரணையில், சபாநாயகர் முடிவு என ஹைகோர்ட் அறிவித்தது.
உச்சநீதிமன்றம் அதிருப்தி
இதன்பிறகு உச்சநீதிமன்றம் சென்ற தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு அங்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. மீண்டும் எம்எல்ஏக்களாகினர். அதேநேரம் போப்பையாவின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளிப்படுத்தியது. இதனால்தான் காங்கிரஸ், மஜத இப்போது அச்சத்தில் உள்ளது. மேலும், போப்பையாவைவிட சீனியர்கள், அதிகமுறை வென்ற உறுப்பினர்கள் இருக்கும்போது போப்பையாவை ஏன் இடைக்கால சபாநாயகராக ஆளுநர் நியமித்தார் என்ற கேள்வியை உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் முன் வைத்துள்ளது.