தலைக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டவர், தேச துரோக குற்றவாளி! யார் இந்த மஸ்ரத் ஆலம்?
ஸ்ரீநகர்: பத்து லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்தான் முஸ்லிம் லீக் இயக்கத்தின் முக்கியத் தலைவரான மஸ்ரத் ஆலம். கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட அவர், தற்போது காஷ்மீர் அரசால் விடுவிக்கப்பட்டிருப்பது மத்திய அரசுக்கு தலை வலியை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த மஸ்ரத் ஆலம்? அவரது பின்னணி என்ன? தெரியுமா..
2010ம் ஆண்டு, ஏப்ரல் 30ம் தேதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக இந்திய ராணுவம் கூறியது. ஆனால் ரஃபியாபாத் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மூன்று பேரை ராணுவம் சுட்டுக்கொன்று விட்டு நாடகமாடுவதாகக் கூறி காஷ்மீர் முழுவதும் போராட்டம் வெடித்தது. சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேருக்கும் ராணுவத்தில் வேலைவாங்கித் தருவதாக, கூறி அழைத்துச் சென்று அவர்களை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பிரிவினைவாத இயக்கமான ஹுரியத் மாநாடு, தலைமையில், ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்தில், முஸ்லீம் லீக் இயக்கத்தின் மஸ்ரத் ஆலம் முக்கிய பங்கு வகித்தார். 2010 மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கற்களை வீசித் தாக்கும் போராட்டத்தில் ஈடுபடுமாறு இளைஞர்களுக்கு மஸ்ரத் ஆலம் உத்தரவிட்டதாக கூறப்பட்டது.
அவ்வாறு நடத்தப்பட்ட போராட்டத்தில் துணை ராணுவத்தினர் ஆயிரத்து 274 பேரும், காவல்துறையினர் 2 ஆயிரத்து 747 பேரும் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் போலீசாரும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 120 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மஸ்ரத் ஆலமை தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறை அவரை ஹர்வான் பகுதியில் 2010ம் ஆண்டு கைது செய்தது. 44 வயதான மஸரத் ஆலம் மீது தேச துரோகம், கொலை உள்ளிட்ட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில்தான் காஷ்மீர் அரசு இவரை விடுதலை செய்துள்ளது. காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரிவினைவாதிகளை ஒடுக்குவது பாஜகவின் கொள்கையாக இருந்துவரும் நிலையில், கூட்டணி கட்சியோ, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.