மோடியே பாராட்டிய காஷ்மீர் பைல்ஸ்.. வெறுப்பு படம் என சாடிய இஸ்ரேல் இயக்குநர் -யார் இந்த நாதவ் லாபிட்?
பானாஜி: கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை இழிவானது என்று பிரச்சார நெடி கொண்டது எனவும் விமர்சித்து, அது தேர்வு செய்யப்பட்டது பற்றியும் கேள்வி எழுப்பி இருக்கும் தேர்வுக்குழு தலைவர் நாதன் லாபிட் யார்? விரிவாக பார்ப்போம்.
கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட திருவிழாவில் சர்வதேச அளவில் பல நாடுகள், பல மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுவது வழக்கம்.
உலகின் பல நாடுகளிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதுபோன்ற திரைப்பட திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும் ஆசியாவின் மிகவும் பழமையான திரைப்பட விழாவாக இது இருக்கிறது.
இழிவானது.. வெறுப்புணர்வை பரப்பும் படம்! தி காஷ்மீர் பைல்ஸ் பார்த்து கடுப்பான கோவா திரைப்பட விழா ஜூரி
79 நாடுகள்
இதை மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கோவா மாநில அரசுடன் இணைந்து நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய 53 வது கோவா திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த திரைப்பட விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
ஜெய்பீம் திரைப்படம்
குறிப்பாக இந்த திரைப்பட விழாவில் கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி மொத்த நாட்டையும் உலுக்கிய இருளர் பழங்குடி மக்களுக்கு எதிரான போலீசாரின் கொடூரங்களையும், லாக் அப் மரணங்களின் வலியையும் பேசிய தா.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் திரையிடப்பட்டது.
காஷ்மீர் பைல்ஸ்
அதேபோல் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்டது. இந்த திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படமாக ஸ்பானிஷ் படமான 'ஐ ஹேவ் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ்' தேர்வானது. சிறந்த இயக்குநருக்கான விருதை 'நோ எண்ட்' திரைப்பட இயக்குநர் நடேர் சேவர் பெற்றார். அந்த படத்தின் நடிகர் வாகித் முபாசரி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டு விருது அறிவிக்கப்பட்டது.
தேர்வுக்குழு ஜூரி
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற திரைப்பட திருவிழாவின் நிறைவு விழாவில் உலக புகழ்பெற்ற சினிமா கலைஞர்கள் நிறைந்திருந்த அரங்கத்தில் திரைப்பட திருவிழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார். காஷ்மீர் பைல்ஸ் வெறுப்புணர்வை பரப்பும் இழிவான படம் அவர் கடுமையான சாடினார்.
கடும் விமர்சனம்
பெருமை மிகுந்த கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் பொறுத்தமற்ற இந்த படத்தை தேர்வு செய்துள்ளது அதிர்ச்சி தருவதாக அவர் சாடி இருக்கிறார். "இந்த திரைப்படத்தால் நான் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தோம். காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட திருவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு மேடையிலேயே நாங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்." என்று அவர் கூறினார்.
மோடியின் பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடியால் சிறந்த படம் என்று பாராட்டப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு பாஜக ஆளும் பல மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. அரசு அலுவலர்கள் இதனை காண விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் என அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த படம், தவறாக தகவல்களை கொண்டு காஷ்மீர் மக்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.
யார் இந்த நாதவ் லாபிட்
இந்த நிலையில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டு மத்திய அரசால் திரைப்பட திருவிழாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை விமர்சித்த நாடவ் லாபிட் யார் என பலரும் இணையத்தில் தேடி வருகிறார்கள். நாடவ் லாபிட் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பிறந்தவர். திரைப்பட எடிட்டர் எரா லாபிட் மற்றும் எழுத்தாளர் ஹைம் லாபிட் தம்பதிக்கு 1975 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் நாடவ் லாபிட்.
ராணுவ வீரர்
இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய இவர், ஜெருசலேம் திரைப்பட கல்வியை பயின்றார். போலீஸ்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமான லாபிட், லோகார்னோ திரைப்பட திருவிழாவில் ஜூரி விருதை வென்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான தி கிண்டர்கார்டன் டீச்சர் படமும் சர்வதேச விமர்சகர் வாரத்தில் திரையிடப்பட்டது.
விருதுகள்
அதை தொடர்ந்து டைரி ஆஃப் எ வெட்டிங் போட்டோகிராஃபர், சினானிம்ஸ், எஹெட் நீ ஆகிய திரைப்படங்களையும், சில குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார். இதில் சினானிம்ஸ் படம் பெர்லின் திரைப்பட விழாவில் தங்க கரடி விருதை வென்றது. இவர் புகழ்பெற்ற கேன்னஸ் திரைப்பட விழாவின் ஒரு பகுதியான சர்வதேச விமர்சகர் வாரத்தின் ஜூரியாக தேர்வு செய்யப்பட்டார்.
பாலஸ்தீனுக்காக குரல் கொடுத்தவர்
இஸ்ரேலில் பிறந்தாலும் பாலஸ்தீன் மக்களுக்காக பல வகைகளில் குரல் எழுப்பி இருக்கிறார். பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், அந்நாட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டது, ஏவுகணை தாக்குதல்கள், காசா எல்லை பிரச்சனை, பாலஸ்தீனியர்களின் உரிமைகள் குறித்து பேசி உள்ளார். சர்வதேச அளவில் கவனிக்கப்படும் இயக்குநரான லாபிடின் இக்கருத்து உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.