ராம்நாத் கோவிந்த்.. தலித் வகுப்பை சேர்ந்த நாட்டின் 2வது ஜனாதிபதி!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த் ஒரு தலித் தலைவராகும். இதற்காகவே அவரை முன்னிருத்தியிருந்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என தீவிர விவாதங்கள் நடந்து வந்த நிலையில். அக்கட்சியை சேர்ந்த நாட்டு மக்களிடையே பிரபலமாக உள்ள பல்வேறு பெயர்கள் விவாதிக்கப்பட்டு வந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 71 வயதாகும், ராம்நாத் கோவிந்த் அக்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரை பூர்வீகமாக கொண்டவர் இவர்.
1945ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி பிறந்த இவர், பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்தார்.
உத்தரபிரதேசத்தில் இருந்து 1994-2000 மற்றும், 2000-2006 வருடங்களில் பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்தவர் ராம் நாத் கோவிந்த்.
இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்று, டெல்லியில் பயிற்சி எடுத்தவர்.
பாஜக தலித் பிரிவின் முன்னாள் தலைவராகும் இவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பின்புலமாக கொண்டவர்.
1998-2002க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இப்பதவியில் இருந்தார். அனைத்திந்திய கோலி சமாஜ் தலைவராகவும் பதவி வகித்தவர்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த இவர், 2015 அக்டோபர் 8ம் தேதி முதல், பீகார் ஆளுநராக பதவி வகித்து வந்தார்.
ராம்நாத்கோவிந்த், 23ல் வேட்புமனு தாக்கல் செய்தார். இப்போது நாட்டின் 14வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேஆர் நாராயணனுக்கு பிறகு தலித் பிரிவை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.