தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சாதனை இதுதான்!
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீரா குமார் போட்டியிடுகிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு இதோ:
1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், தேராபூர் தாலுகா பராங்க் என்ற கிராமத்தில் பிறந்தவர் ராம்நாத் கோவிந்த்.
தலித் குடும்பத்தில் பிறந்த ராம்நாத் கோவிந்த், தனது பள்ளி, கல்லூரி நாட்களிலேயே பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து பல போராட்டங்களில் ஈடுபட்டார்.
ராம்நாத் கோவிந்துக்கு நலிவடைந்தோரின் பாதுகாவலர் என்ற அடைமொழி அப்போதே ஏற்பட அவரின் போராட்டங்கள் காரணம்.
கான்பூர் பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில், வழக்கறிஞருக்கான, எல்.எல்.பி. பட்டமும் பெற்றார். 1971ல் டெல்லி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். சிவில் சர்வீசஸ் தேர்வில் 2 முறை தோல்வி கண்டு 3வது முறையாக தேர்ச்சி பெற்றார்.
1977ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து 1980ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை மத்திய அரசின் வக்கீலாக சுப்ரீம் கோர்ட்டில் பணி புரிந்தார். தலித் மற்றும் பழங்குடியினர். நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் நாடாளுமன்ற நிலைக்குழு உள்பட பல்வேறு நிலைக்குழுக்களில் உறுப்பினராக அவர் பணியாற்றி இருக்கிறார்.
லக்னோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வாரிய உறுப்பினர், கொல்கத்தா ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு நிர்வாக குழு உறுப்பினராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
ராஜ்யசபாவுக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து தொடர்ச்சியாக 1994-2000, 2000-2006 ஆகிய இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றினார். பதவி காலத்தில் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் கிராமப் புற கல்வி வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தி தீவிரமாக பாடுபட்டார்.
Recommended Video
தலித், பழங்குடியினர் வகுப்பில் நலிவடைந்தோர், பெண்களுக்கு டெல்லி இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சட்ட உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். எம்.பி.யாக பதவி வகித்தபோது பாகிஸ்தான், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
பாஜகவின் தலித் மோர்ச்சா அமைப்பின் தலைவராக 1998 முதல் 2002ம் ஆண்டு வரை பணியாற்றினார். இதேபோல் அகில இந்திய கோலி சமாஜ் தலைவராகவும் பதவி வகித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக பதவி வகித்த அவர் 2015ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
71 வயதாகும் ராம்நாத் கோவிந்த்தின் மனைவி பெயர் சவீதா. 1994ல்தான் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரசாந்த் குமார் என்ற மகனும், சுவாதி என்ற மகளும் உள்ளனர்.