யார் இந்த "தில்" ரூபா? பரபர பின்னணி தகவல்கள்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் காட்டப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டிய டிஐஜி ரூபா பற்றிய பின்னணி தகவல்கள் இதுதான்.
பெங்களூரு: சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்புச் சலுகைகள் காட்டப்படுவதாக டிஐஜி ரூபா கிளப்பியுள்ள ஊழல் புகார் மாநிலம் தாண்டி தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த ரூபா என்று பல்வேறு மட்டத்திலும் பேச்சு எழுந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. அவருடன் மற்ற கைதிகளான இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவுக்கு சிறைக்குள் தனி கிச்சன் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ் மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆனாலும் விடாது கருப்பு போல, சசிகலாவுக்கு சலுகைகள் காட்டப்பட்டதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று அதிர வைத்துள்ளார் ரூபா.
நேர்மையாக செயல்படுவதே ரூபா லட்சியம்
அரசுப் பணியில் நேர்மையாகச் செயல்படுவது என்பது அதிகாரிகளின் கடமைகளில் ஒன்று என்பதை தினமும் கடைபிடித்து வருபவர். ரூபாவின் அம்மா அப்பா இருவரும் அரசு உயர் அதிகாரிகள்தான். அவரின் தங்கை ரோகிணி, ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
பரிசுகள் வென்ற ரூபா
ஐ.பி.எஸ் பணியில் நேர்மையாக செயல் புரிந்ததற்காக பல பரிசுகளை பெற்றுள்ளார் ரூபா. தனது பணியை எப்போதும் பொழுதுபோக்காகக் கருதியது இல்லை. போலீஸ் அதிகாரம் என்பதை, அதிகார வர்க்கத்தினரின் அடிவருடியாக இருப்பதை ரூபா எப்பபோதும் விரும்பியதில்லை.
Recommended Video
உமா பாரதியை கைது செய்தார்
கடந்த 2007ம் ஆண்டு தற்போது மத்திய அமைச்சராக உள்ள உமா பாரதி, ஹூப்ளி மாநகரத்துக்கு வந்தால் கலவரம் வெடிக்கும் என்கிற பதற்ற நிலை இருந்து வந்தது. உமாபாரதியை தடுத்து நிறுத்த பயந்த பல்வேறு அதிகாரிகளுக்கு மத்தியில் உமாபாரதி ஹூப்ளிக்கு வந்ததும் அவரை கைது செய்தார்.
எடியூரப்பாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்
முதல்வர் எடியூரப்பாவுக்கு அதிகப்படியான காவல் சேவைகள் வழங்கப்படுகின்றன; இது தேவையில்லாத செலவு எனக்கூறி பாதுகாப்பு வாகனங்களையும் போலீஸ் அதிகாரிகளையும் குறைத்தார்.
முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு வாபஸ்
ரூபா பெங்களூரு துணை கமிஷனராக இருந்தபோது, முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் பிரபலங்களுக்கும் தேவையில்லாமல் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றார். இதில் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை ரூபா பெற்றார்.
டுவிட்டரில் சண்டை
அண்மையில் மைசூரு குடகு எம்பி பிரதாப் சிம்ஹாவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். கர்நாடக மாநில ஐபிஎஸ் மூத்த அதிகாரிகள் தொடர்பாக நடந்த அந்த வாதம் பெரும் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மிஸ் தாவனகரே
தன்னை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுபவர் ரூபா. அடிக்கடி அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளுவார். 'மிஸ் தாவனகரே' பட்டத்தையும் பெற்றுள்ளார்.
ஐஏஎஸ் கணவர்
கடந்த 2003ல், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முனிஷ் மோட்கில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரூபா. முனிஷ்ஷும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் தற்போது கர்நாடகாவில் மின்சார வாரிய இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணிச்சலான பெண் அதிகாரி
கர்நாடக மாநிலத்தினை சேர்ந்த துணிச்சலான பெண் ஐபிஎஸ் அதிகாரியான இவர் 2000ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. அப்போது 43வது இடம்பிடித்த ரூபா, பயிற்சியில் 5வது இடம்பிடித்து சொந்த மாநிலத்துக்கு அதிகாரியாக வந்தார். ஜனாதிபதி விருதும் வாங்கியுள்ளார்.
விபிசிங் கையால் விருது
பள்ளியில் படிக்கும் காலத்திலே முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிடம் சிறந்த என்சிசி மாணவி என்கிற விருதை வாங்கியவர். பள்ளிப் படிப்பில் கர்நாடக மாநில அளவில் சிறப்பான மதிப்பெண் பெற்றார்.
துப்பாக்கி சுடுதலில் ஆர்வம்
துப்பாக்கிச் சுடுவதில் அதிக ஆர்வம் இருந்து வந்ததால் போலீஸ் பணியில் ஆர்வம் காட்டினார். மேலும் சைக்காலஜி படிப்பை தேர்ந்தெடுத்து, அதிலும் தங்கம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை நாட்டியத்தில் ஆர்வம்
பரதநாட்டியம் ஆடுவதில் தேர்ச்சி பெற்றவர். இந்துஸ்தானி இசையிலும் நன்கு பயிற்சிபெற்றவர்.