1990-இல் சாதாரண செயின் ஸ்னாட்ச்சர்.. இன்றோ கான்பூரின் டான்.. யார் இந்த விகாஸ் துபே!
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த விகாஸ் துபே இன்று உஜ்ஜயினில் கைது செய்யப்பட்டார். அவர் யார் எப்படி குற்றச் செயல்களை புரிந்தார்? அவரது பின்னணி என்ன என்பதே தற்போது பேசும்பொருளாகியுள்ளது.
Recommended Video
விகாஸ் துபே கடந்த வாரம் கான்பூரில் 8 போலீஸாரை சுட்டுக் கொலை செய்துவிட்டு கடந்த ஒரு வாரமாக தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் இவரை உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினில் மகாகாலபைரவர் கோயிலில் அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பாஜக தலைவரும் உபி அமைச்சருமான சந்தோஷ் சுக்லா கொலை உள்பட பல்வேறு குற்றவழக்குகள் கடந்த 2001-ஆம் ஆண்டு இவர் மீது பதிவாகியுள்ளன.
கோட்டை விட்ட உபி போலீஸ்...அள்ளிய மபி போலீஸ்...அலறிய விகாஸ்... விகாஸ் துபே பின்னணி!!
பிக்ரு கிராமம்
யார் இவர் என்பதை பார்ப்போம். விகாஸ் துபேயின் சொந்த ஊர் சிவ்லி காவல் நிலையத்திற்குள்பட்ட பிக்ரு கிராமம்தான். எனினும் கான்பூரில் உள்ள சவ்பேபூர் காவல் நிலையத்தில் உள்ள இவர் மீது கொலை. கொலை முயற்சி உள்பட 60-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது குற்றவியல் நடவடிக்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் துபே. இவரை கைது செய்ய முனைப்பு காட்டியது இந்த காவல் நிலையம்தான்.
போலீஸ் குழு
கடந்த ஜூலை 2 ஆம் தேதி பிக்ரு கிராமத்தில் உள்ள விகாஸ் துபேவை கைது செய்ய போலீஸ் குழுவினர் சென்றனர். இந்த கொலை வழக்குகளை விசாரிக்கும் குழுவினர் உரிய நடைமுறைகளை பின்பற்றியே அங்கு சென்றனர். விகாஸ் துபே ஏற்கெனவே பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் இதுவரை அவர் மீதுள்ள 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றதில்லை.
நெருக்கம்
காரணம் அரசியல் வட்டாரங்களை தனக்கு நெருக்கமாக்கிக் கொண்ட துபே, கான்பூரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க மிகப் பெரும் சவாலாக இருந்தார். கடந்த 2000ஆம் ஆண்டு அவர் சிறையில் இருந்த போது, அங்கேயே கொலை செய்ய திட்டமிட்டு அதை செய்தும் காட்டினார். இறந்தவர் பெயர் ராம்பாபு யாதவ். அதே ஆண்டு கல்லூரி ஊழியர் கொலை வழக்கில் துபே குற்றம்சாட்டப்பட்டார்.
உபி அமைச்சர்
பாஜக தலைவர் சந்தோஷ் சுக்லா கொலை வழக்கில் விகாஸ் துபேயின் பெயர் ஈடுபட்டுள்ளது அவர் செய்த குற்றங்களிலேயே மிகவும் அதிர்ச்சிக்குரியதாகும். சுக்லா உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமைச்சராக இருந்தார். 25 பேர் கண் முன்னே காவல் நிலைய வளாகத்தில் வைத்து சுக்லா கொல்லப்பட்டார். சுக்லா கொலை வழக்கில் கண்ணால் பார்த்த சாட்சிகளில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள். இவரை எதிர்த்து சாட்சி சொன்ன போதிலும் 4 வருடங்கள் கழித்து அதாவது 2005-ஆம் ஆண்டு போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் துபே.
பணம்
விகாஸ் துபேயை நீதிமன்றம் விடுவிக்கப்படுவதற்கு முன்பும் அவர் ஒரு கொலை செய்தார். உள்ளூர் வியாபாரி தினேஷ் துபே என்பவரை கொலை செய்தார். 1990ஆம் ஆண்டு வழிப்பறி, கொள்ளை என தனது பிழைப்பை நடத்தியவர் விகாஸ். பின்னர் கான்பூரில் ஒரு டான் அளவுக்கு வளர்ந்து விட்டார். பணம் சம்பாதிக்கத் தொடங்கியவுடன் பாதுகாப்புக்காக கடந்த 1995-96-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.
வெற்றியாளர்
விகாஸுக்கு அண்மைகாலமாக அரசியல் கனவுகள் இருந்தன. எம்எல்ஏ ஆகவும் விரும்பினார். இவர் ஜில்லா பஞ்சாயத்து அளவிலான பதவிகளையும் வகித்தார். இவரது மனைவியும் ஜில்லா பஞ்சாயத்து அளவிலான பதவியில் உள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக பிக்ரு கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தலே நடந்ததில்லை என்கிறார் ஊர்மக்கள். விகாஸ் துபே யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் போட்டியிட வேண்டும். அவர்தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட வேண்டும்.
விசாரணை
போலீஸ் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக அரசியல் தொடர்புகளை விகாஸ் பயன்படுத்திக் கொண்டார். அதே போல் காவல்துறையிலும் இவருக்கு நண்பர்கள் ஏராளம். இந்த நண்பர்கள்தான் இவரை கொலை வழக்கில் கைது செய்ய சென்றபோது போலீஸ் நடமாட்டம் குறித்துதகவலை துபேவுக்கு கொடுத்தனர். விகாஸ் துபேவுடன் தொடர்புடையதாக கூறப்படும் 200 போலீஸார் விசாரணைக்குள்படுத்தப்பட்டுள்ளார்கள்.