நல்லவேளை யாரும் ஜன்னலோர சீட்டைக் கேட்டு அடம் பிடிக்காம விட்டாங்களே...!
டெல்லி: பெரிய பெரிய விஐபிக்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் படும் கஷ்டம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. காரணம், அத்தனை பேருக்கும் சரியான முறையில் உட்கார சீட் ஒதுக்குவதுதான் பெரும் சவாலுக்குரியதாக மாறிப் போகும்.
அதிலும் பலர் இந்த சீட் ஒதுக்கீட்டில் ஈகோ, கெளரவம், இமேஜ் என்று நிறைய எதிர்பார்ப்பார்கள். அதையெல்லாம் சமாளித்து அத்தனை பேரையும் உட்கார வைப்பதே ஒரு பெரிய கலைதான்.
அதேபோலத்தான் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவின்போதும் உள்ளூர் சாமியார்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் குவிந்து விட்டனர். அவர்களை உட்கார வைத்து உரிய கெளரவம் தருவதற்காக பலரை நியமித்திருந்தனர்.
முன்வரிசையில்...முக்கியத் தலைகள்
வழக்கம் போல முன்வரிசையில் முக்கியத் தலைவர்களை அமர வைத்திருந்தனர். பல முக்கியமான சாதுக்கள், சாமியார்களுக்கும் ஒரு பக்க முன்வரிசையை ஒதுக்கியிருந்தனர். மறுபக்க முன்வரிசையில் சார்க் நாடுகளின் தலைவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
பிரணாப்.. மோடிக்கு தனி மேடை
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுக்கு தனியாக மேடை போட்டு அங்கு ஒதுக்கி விட்டனர்.
பிரதீபா பாட்டீல் பக்கத்தில் சோனியா காந்தி
முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்திரா காந்தியின் தீவிர விசுவாசிகளில் ஒருவருமான பிரதீபா பாட்டீல் அருகே போய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமர்ந்து கொண்டார்.
நேபாள பிரதமரும் சோனியா பக்கத்தில்
நேபாள நாட்டு பிரதமர் சுஷில் குமார் கொய்ராலா, சோனியாவுக்கு வலது பக்கமும், இடது பக்கத்தில் பாட்டீலும் அமர்ந்திருந்தனர்.
கலாம் பக்கத்தில் ராம்கூலம்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அருகே மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் உட்கார்ந்திருந்தார்.
மன்மோகன் மனைவிக்கு அருகே கலாம்
கலாமுக்கு இந்தப் பக்கம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கெளர் அமர்ந்திருந்தார்.
மன்மோகன் - மனைவிக்கு நடுவே நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு நடுவே உட்கார்ந்து கொண்டார்.
இந்தப் பக்கம் நம்ம ஹமீத்.. அந்தப் பக்கம் ஆப்கான் ஹமீத்
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் அருகே குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி அமர்ந்திருந்தார்.
அத்வானி பக்கத்தில் ராஜபக்சே
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அந்தப் பக்கம் ராஜபக்சே சிரித்தபடி உட்கார்ந்திருந்தார். முதலில் மன்மோகன் அருகில்தான் உட்காரப் போனார் ராஜபக்சே. ஆனால் அத்வானிதான் அவரைக் கூப்பிட்டு தன் பக்கம் உட்கார வைத்துக் கொண்டார். அந்தப் பக்கம் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் உட்கார்ந்திருந்தார்.
அவர்தான் துரைப்பாண்டி...!
இந்தக் கூட்டத்தில் வெள்ளை நிற உடையில், சின்ன தாடியுடன், மெல்லிய புன்னகையுடன் ஒருவரும் தனது அம்மாவுடன் வந்திருந்தார். அவரைத்தான் பலரும் போட்டி போட்டு வேடிக்கை பார்த்தனர்.. அவர்தான் ராகுல் காந்தி.
தேவெ கெளடா பக்கத்தில் பூடான் பிரதமர்
பூடான் பிரதமர் ஷெரிங் டோப்காய், முன்னாள் பிரதமர் தேவெ கெளடா அமர்ந்திருந்தார்.
கெளடா தூங்கவே இல்லையே...
வழக்கமாக நீண்ட நேரம் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தால் சைட் பை சைடாக ஒரு குட்டித் தூக்கம் போட்டு விடுவார் கெளடா. அதுவும் கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்து கெட்டியாக பிடித்துக் கொண்டு தூங்குவார். ஆனால் நேற்று அவர் கண்ணசந்ததாக தெரியவில்லை.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ அருகே ஜோஷி
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அருகே முரளி மனோகர் ஜோஷி அமர்ந்திருந்தார். இவர் ஏற்கனவே வாரணாசி சீட்டை மோடிக்காக விட்டுக் கொடுத்தவர் ஆவார். ஆனால் பாவம் இவருக்கு இப்போது அமைச்சர் சீட் கிடைக்கவில்லை.. அமைச்சர்களை வேடிக்கை பார்க்கத்தான் சீட் கிடைத்தது...
ரிதம்பரா...
பெண் சாமியார் சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட பல்வேறு சாமியார்களும் முன்வரிசையில் ஜெகஜோதியாக அமர்ந்திருந்தனர்.
வாங்க சாமி.. இங்க.. முலாயமை பிடிச்சு இழுத்த அமீத் ஷா
சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவும் கூட வந்திருந்தார். அவர் அமீத் ஷா வுக்குப் பின்னால் போய் நைஸாக உட்காரவே, அதைப் பார்த்த ஷா, உடனே அவரது கையைப் பிடித்து இழுத்து முன்வரிசைக்கு கூட்டி வந்து உட்கார வைத்தார்.
தர்மசங்கடம்.. தாறுமாறாக பேசியதால் ஏற்பட்ட சங்கடம்.. இப்படி எல்லாமே நேற்று ஒரே நாளில் காணாமல் போய் கலகலகலவென்று காணப்பட்டது தலைவர்களின் முகங்கள்... நல்லவேளையாக யாரும் ஜன்னலோர சீட் கேட்டு நேற்று அடம்பிடிக்கவில்லை...