இந்திரா காந்தி காரை நான் அப்புறப்படுத்தவில்லை.. கிரண் பேடி
டெல்லி: 1982ம் ஆண்டு டெல்லி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக இருந்தபோது விதியை மீறி தவறான முறையில் நிறுத்தப்பட்டிருந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் காரை தான் அப்புறப்படுத்தவில்லை என்றும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர்தான் அதைச் செய்தார் என்றும், அதற்காக தான் பழிவாங்கப்பட்டதாகவும் கிரண் பேடி கூறியுள்ளார்.
இந்திரா காந்தி காரை அப்புறப்படுத்திய சம்பவத்திற்குப் பின்னர் கிரேன் பேடி என்ற செல்லப் பெயர் கிரண் பேடிக்கு வந்து சேர்ந்தது. போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த போது, சாலையை மறித்து நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்துவதில் பிரபலமானவர்.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் கிரண்பேடி. காந்தியவாதி அன்னா ஹாசேரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராடிய கிரண்பேடி, தற்போது பாஜக சார்பில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப் பட்டுள்ளார்.
பேட்டி...
இந்நிலையில், கடந்த 1980 ஆண்டு டெல்லி போலீசின் போக்குவரத்துத் துறை துணை கமிஷனராக பணியாற்றிய போது, செய்தவை குறித்து தனியார் செய்தி சேனலுக்கு கிரண் பேடி பேட்டியளித்துள்ளார்.
பிரதமரின் காரும்...
ஒருமுறை சாலையில் விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த கார்களை அகற்றும் பணியில் கிரண்பேடியின் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அம்பாசடர் காரும் தவறான இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதை கிரண் பேடி குழு பார்த்ததாம்.
கிரண்பேடி இல்லை...
ஆனால், பிரதமரின் கார் என்று தெரிந்தும், ‘நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே' என அவரது காரையும் கிரேன் மூலமாக தூக்கி விட்டார்களாம். இருப்பினும் காரை அப்புறப்பபடுத்தியது கிரண் பேடி இல்லையாம். மாறாக அவரது குழுவைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் நிர்மல் சிங் என்பவராம்.
பரபரப்பு...
இந்த சம்பவம் நடந்தபோது இந்திரா காந்தி ஊரில் இல்லை. மாறாக வெளிநாடு போயிருந்தாராம். இந்திரா காந்தியின் காரை கிரண் பேடி குழு அப்புறப்படுத்தியது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆதரவு...
இந்த விவகாரம் குறித்து கிரண் பேடி கூறுகையில், நான் காரை அப்புறப்படுத்தவில்லை. ஒரு துணை கமிஷனர் அது போலச் செய்வாரா.. எனது குழுவைச் சேர்ந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர்தான் அதைச் செய்தார். மேலும் எனது குழுவைச் சேர்ந்தவர்களுக்கு நான் எப்போதும் ஆதரவாகத்தான் இருப்பேன். அதேபோல நிர்மல் சிங்குக்கும் எதுவும் நேரவில்லை. அவர் தண்டிக்கப்படவும் இல்லை, இடமாற்றம் செய்யப்படவும் இல்லை. அவருக்கு நான் ஆதரவாகத்தான் இருந்தேன் என்று கூறியுள்ளார் கிரண் பேடி.
பழி வாங்கும் நடவடிக்கையா...?
இருப்பினும் இந்த சம்பவத்திற்குப் பின்னர் திடீரென கோவாவுக்கு மாற்றப்பட்டர் கிரண் பேடி. அங்கு 7 மாதம் அவர் பணியாற்றினார். இதை பழிவாங்கும் நடவடிக்கையாக கருதினீர்களா என்று கிரண் பேடியிடம் செய்தியாளர் கேட்டபோது, ஆசிய விளையாட்டுப் போட்டி வரை நான் டெல்லியில் இருக்க அரசு விரும்பியது. அது முடிந்ததும் என்னை இடமாற்றம் செய்தனர்.
தண்டனை தான்....
அப்போது எனது மகளுக்கு மருத்துவப் பராமரிப்பு தேவை, எனவே நான் டெல்லியில் இருக்க அனுமதிக்குமாறு கோரினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. எனவே இதை நான் தண்டனையாகத்தான் கருத முடியும் என்றார் கிரண் பேடி.