தமிழக காவல் துறை டிஜிபி யார்? கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் டெல்லியில் ஆலோசனை
தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபி யார் என்பது குறித்து டெல்லியில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.
டெல்லி: தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி யார் என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை தொடங்கியது.
தமிழக காவல்துறையின் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக உள்ளவர் ராஜேந்திரன். அவர் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் அடுத்த டிஜிபி யார் என்ற ஆலோசனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழக டிஜிபியாக இருந்த அசோக்குமார் பான் குட்கா விவகாரத்தில் சிக்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு அடுத்த இடத்தில் அர்ச்சனா ராமசுந்தரம் , சேகர் , மகேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த டி.கே. ராஜேந்திரனுக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை ஜெயலலிதா கொடுத்தார். அவர் மறைந்த பிறகு, அதே விசுவாசத்தை முதல்வர் எடப்பாடியிடம் காண்பித்தார்.
ஆனால் நாளையுடன் ராஜேந்திரன் ஓய்வு பெறும் நிலையில் புதிய டிஜிபி தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போது கிளம்பியுள்ள பான்குட்கா விவகாரத்தில் ராஜேந்திரன் பெயர் அடிபடுவதால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய டிஜிபியை தேர்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம் நேற்று மாலை டெல்லியில் கூடியது. இதில் தமிழக அரசு முதல் மூன்று இடத்தில் உள்ள ஒருவரை பரிந்துரைத்துள்ளது. தற்போது முதலிடத்தில் மூத்த அதிகாரியாக நேபாள எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரம் உள்ளார். 1980 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவரும் வருகிற அக்டோபரில் ஓய்வு பெறுகிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ராதாகிருஷ்ணன். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியான இவர் 1983-ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். வரும் ஜூலை மாதம் இவரும் ஓய்வு பெறுகிறார். அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் மின்சார வாரிய விஜிலென்ஸ் டிஜிபியாக இருக்கும் மகேந்திரன். இவர் 1984 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி. இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. 2019 ல் ஓய்வு பெறுகிறார்.
அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருமே திமுக ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. அர்ச்சனா டெல்லியில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் மாநில அரசு அவரை நிராகரிக்க வாய்ப்புகள் ஏராளம். ராதாகிருஷ்ணனும் திமுக ஆதரவாளர் என்பதால் வாய்ப்பு இல்லை.
ஆகவே ஓய்வு பெற 2 ஆண்டுகள் பதவி மகேந்திரனுக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மகேந்திரன் எதிலும் சிக்காதவர்.
தற்போது அடுத்த டிஜிபியை நியமிப்பதற்காக மத்திய அரசு தேர்வாணைய தலைவர் சிம்லியா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.