ஐபிஎல் 2021 சீசனில் விடுவிக்கப்பட்டவர்கள் யார் யார்? ரெய்னா உள்ளே, கேதர் வெளியே
2021 ஐபிஎல் சீசனை முன்னிட்டு வீரர்கள் ஏலம் நடக்கவுள்ளது. ஐபிஎல்லில் பங்கேற்கவிருக்கும் எட்டு அணிகளும் சில வீரர்களை விடுவித்துள்ளன. இது குறித்த தகவலை ஐபிஎல்லின் அதிகாரபூர்வ வலைத்தளம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பல சர்வதேச நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
2021 ஐபிஎல் போட்டியில் பங்கெடுக்கவிருக்கும் எட்டு அணிகளில், அதிகபட்சமாக 22 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். குறைந்தபட்சமாக 12 வீரர்களை தக்கவைத்து கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. சென்னை சூப்பர் கிங்ஸ் 18 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. இதில் ரெய்னாவும் அடக்கம்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிதான் ஏலத்தில் செலவழிக்க அதிக அளவில் பணம் வைத்திருக்கிறது. அதாவது 53.20 கோடி ரூபாய்.
குறைந்த தொகையை வைத்திருக்கும் இரு அணிகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இவ்விரு அணிகளிடமும் தலா 10 கோடியே 75 லட்சம் ரூபாய் உள்ளது.
சென்னை அணியிடம் 22.90 கோடி ரூபாய் உள்ளது.
இனி அணி வாரியாக, எந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டார்கள், எந்த வீரர்களை விலக்கி இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நட்சத்திர வீரர்கள் தோனி, ரெய்னா, ஃபாப் டு பிளசிஸ், இம்ரான் தாஹீர், அம்பதி ராயுடு, பிராவோ, ஜடேஜா உள்ளிட்டவர்களை தக்கவைத்திருக்கிறது.
கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்படாத கேதர் ஜாதவ், முரளி விஜய், பியூஷ் சாவ்லா உள்ளிட்டோர் விடுவிடுக்கப்பட்டுள்ளனர். கடந்த சீஸனின் இறுதிக்கட்டத்தில் சென்னைக்காக களமிறங்கிய மோனு சிங் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றதையடுத்து அவரும் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் பங்கெடுக்காத ஹர்பஜன் சிங்கும் விடுவிக்கப்ட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
"சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான என் ஒப்பந்தம் நிறைவடைந்தது. சென்னை அணிக்கு விளையாடியது ஒரு பெரிய அனுபவம். இந்த காலகட்டத்தில் பல பசுமையான நினைத்துப் பார்க்கக் கூடிய நினைவுகள் நடந்தன. பல நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். இவைகளை எல்லாம் வரும் ஆண்டுகளில் நான் இனிமையாக நினைத்துப் பார்ப்பேன். இந்த அருமையான இரண்டு ஆண்டு காலத்தைக் கொடுத்த சென்னை சூப்பர்கிங்ஸ் நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்" என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சில சர்வதேச நட்சத்திரங்களை விடுவித்துள்ளது. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேஸன் ராய், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கரே அடக்கம்.
கீமோ பால், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் லமிச்சனே, மோஹித் சர்மா உள்ளிட்டவர்களும் விடுவிக்கப்ட்டுள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரரும் அதிரடி பேட்ஸ்மேனுமான கிளென் மேக்ஸ்வெல்லை விடுவித்துள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த பௌலிங் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நேசமும் விடுவிக்கப்பட்டுள்ளார். ஷெல்டன் காட்ரெல், க்ருஷ்ணப்பா கெளதம், கருன் நாயர் உள்ளிட்ட சில வீரர்களும் விடுவிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த முருகன் அஷ்வின், அதிரடி வீரர் கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல், தொடக்க வீரர் மயங்க் அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்களை தக்கவைத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பிரபல நட்சத்திர வீரர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை.
க்ரிஸ் க்ரீன், ஹேரி கர்னி, எம் சித்தார்த், நிகில் நாய்க், சித்தேஷ் லட், டாம் பேன்டன் உள்ளிட்ட குறைந்த அனுபவம் கொண்ட வீரர்களே விடுவிக்கப்ட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஆனால் பந்துவீச்சாளர்கள் சிலரையே விடுவித்துள்ளது. மலிங்கா கேட்டுக்கொண்டதுக்கு இணங்க அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மும்பை அணிக்கு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துக்கு அவர் பிரதான துருப்புச்சீட்டாக விளங்கினார். நாதன் கோல்டர் நைல், ஜேம்ஸ் பட்டின்சன், மிட்சல் மெக்ளகென் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை மும்பை அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விடுவிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அந்த அணிக்கு நான்கு சீசன்களில் கேப்டனாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தவிர அங்கித் ராஜ்புத், டாம் குர்ரன், வருன் ஆரோன் உள்ளிட்ட வீரர்கள் விடுவிக்கப்ட்டுள்ளனர்.
- நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”
- "அடுத்தகட்ட சவால்களுக்கு தயார்" - டெஸ்ட் அணிக்கான சீருடையுடன் நடராஜன் உற்சாகம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை நியமித்துள்ளது.
பெங்களூரு அணியும் சில நட்சத்திர வீரர்களை விடுத்துள்ளது. இதில் ஆல்ரவுண்டர்கள் கிறிஸ் மோரிஸ், மெயின் அலி, குர்கீரத் மன் பந்துவீச்சாளர்கள் ஸ்டெயின், உமேஷ் யாதவ், இசுரு உதானா, பவன் நெகி அடக்கம். சர்வதேச அளவில் அதிரடி பேட்ஸ்மேனாக அறியப்படும் ஆரோன் பின்ச் கடந்த சீசனில் சோபிக்காததை அடுத்து அவரையும் விடுத்துள்ளது பெங்களூரு நிர்வாகம்.
அதே சமயம் இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் ஜொலித்த முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடராஜன், வார்னர், பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், ரஷீத் கான் என பலரையும் தக்கவைத்துள்ளது. பில்லி ஸ்டான்லேக், ஃபபியன் ஆலன் உள்ளிட்ட 5 பேர் விளக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2021 சீசனுக்காக ஏலம் எப்போது நடைபெறவுள்ளது என அறிவிக்கப்படவில்லை.
பிற செய்திகள்:
- சசிகலாவுக்கு என்ன பிரச்சனை? இப்போது எப்படி இருக்கிறார்? டிடிவி தினகரன் விளக்கம்
- ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: அமெரிக்க அதிபரின் முதல் உரை
- அமெரிக்க வரலாற்றில் டொனால்டு டிரம்ப் விட்டுச்சென்ற மரபு என்ன?
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த மின்னல் வேக முதல் உத்தரவுகள் என்னென்ன?
- ஜோ பைடன் ஆட்சியில் பதவி வகிக்கப்போகும் இந்திய வம்சாவளியினர் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: