பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி... திரிபுராவின் முதல்வர் யார்?
திரிபுராவில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் பாஜகவின் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அகர்தலா : திரிபுராவில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் பாஜகவின் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திரிபுரா மாநில பாஜக தலைவர் பிப்லப் குமார் தேவிற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இன்று முதல்வரை இறுதி செய்கிறது பாஜக நாடாளுமன்றக் குழு.
திரிபுராவில் ஐபிஎஃப்டி கட்சி கூட்டணியுடன் தேர்தல் களம் கண்ட பாஜக 25 ஆண்டுகளாக அங்கு நடந்து வந்த இடது சாரி ஆட்சியை பதவி இழக்கச் செய்துள்ளது. பாஜக கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியமைக்கின்றன.
இந்நிலையில் திரிபுராவில் பாஜகவின் முதல்வர் யார் என்பதை பாஜகவின் நாடாளுமன்ற குழு முடிவு செய்கிறது. பாஜகவின் வடகிழக்கு மாநில தேர்தல் வெற்றிக்கு பொதுச்செயலாளர் ராம் மாதவ் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
திரிபுரா வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ராம் மாதவ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூடி முதல்வரை முடிவு செய்யும். ஆனால் பாஜகவின் முதல்வர் நிச்சயமாக மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்வார் என்றும் அகர்தலாவில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாதவ் தெரிவித்துள்ளார்.
திரிபுராவின் பாஜக முதல்வராக பிப்லப் குமார் தேவ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. திரிபுரா வெற்றிக்கு பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கும் பிப்லப் குமார் தேவின் பிரச்சாரமும் தேர்தல் பணியும் முக்கிய காரணம் என்று பார்க்கப்படுவதால் அவருக்கு முதல்வர் பதவிக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
பாஜக நாடாளுமன்றக் குழு பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிதியமைச்சர் அருண்ஜேட்லி, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.