இமாச்சல பிரதேசத்தில் 40 சீட்களை அள்ளிய காங்கிரஸ்.. முதல்வர் ரேஸில் 7 பேர்! யார் இந்த பிரதிபா சிங்?
சிம்லா : இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் அடுத்து முதல்வராகப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இமாச்சல் முதல்வர் ரேஸில் 7 பேர் இருக்கின்றனர்.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
ஆளும் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த அவர், பதவியில் இல்லாவிட்டாலும் மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அரியணை ஏறும் நிலை உருவாகியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார்?பாஜக, காங்கிரஸில் கவனம் பெறும் 5 தொகுதிகள்! நிலவரம் என்ன?
இமாச்சலில் காங்கிரஸ் கை
கடந்த மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் மாறிமாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் காலை 11 மணிக்கு மேல் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 39 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் வென்றுள்ளனர்.
40 இடங்கள்
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை அடைய 35 இடங்களில் வெல்ல வேண்டும் என்கிற நிலையில் 39 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைய இருக்கிறது. இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஏற்று, காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார்.
மாறி மாறி
இமாச்சல பிரதேசத்தில் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சிபுரிந்து வருகின்றன. கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரஸ் 21 இடங்களிலேயே வெற்றி பெற்றது. தற்போது காங்கிரஸ் 40 இடங்களைக் கைப்பற்ற உள்ளது. பாஜக 25 இடங்ககைக் கைப்பற்ற உள்ளது.
மூன்றாவது மாநிலம்
தற்போது ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்து வருகிறது. அந்த பட்டியலில் மேலும் ஒரு மாநிலம் சேர்வது காங்கிரஸ் கட்சியினிரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி
இமாச்சல பிரதேச காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான, சத்தீஸ்கர் முதல் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். அது நடக்கிறது. பாஜகவால் எதையும் செய்ய முடியும் என்பதால், எம்.எல்.ஏக்களை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களில் எனது தாயும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான பிரதீபா சிங்கும் உள்ளார் எனக் கூறியுள்ளார்.
ரேஸில் 7 பேர்
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், முதல்வர் யார் என்ற யூகங்கள் அரசியல் களத்தையே பரபரப்பாக்கியுள்ளன. இமாச்சல பிரதேச முதல்வர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிபா சிங், சுக்விந்தர் சிங் சுகு, முகேஷ் அக்னிஹோத்ரி, தாகுர் கவுல் சிங், ஆஷா குமாரி, ஹர்ஷ்வர்தன் சவுகான், ராஜேஷ் தர்மானி ஆகியோர் உள்ளனர்.
பிரதீபா சிங்
இவர்களில் பிரதீபா சிங், 6 முறை முதல்வராக இருந்து மறைந்த வீரபத்ர சிங்கின் மனைவி ஆவார். தற்போது மாண்டி தொகுதி எம்.பியாக இருக்கும் பிரதிபா சிங் தற்போதைய தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், முதல்வர் ரேஸில் இருக்கிறார். இதனை அவரது மகன் பூபேஷ் பாகலும் உறுதி செய்துள்ளார். பிரதிபா சிங்கின் மகன் விக்ரமாதித்யா இந்த தேர்தலில் சிம்லா ரூரல் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
சுக்விந்தர் சிங் சுகு
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரக் குழு தலைவராக பணியாற்றிய சுக்விந்தர் சிங் சுகு, நதோன் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான இவரும் முதல்வர் ரேஸில் இருக்கிறார்.
தாகுர் கவுல் சிங் - முகேஷ் அக்னிஹோத்ரி
இமாச்சல பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றிய முகேஷ் அக்னிஹோத்ரி, 4 முறை எம்.எல்.ஏவாக இருப்பவர், வீரபத்ர சிங் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இவரும் இமாச்சல் முதல்வர் ரேஸில் இருக்கிறார். 8 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங். மூத்த தலைவர் தாகுர் கவுல் சிங்கும் முதல்வர் ரேஸில் இருக்கிறார். இவர்கள் இருவருமே வீரபத்ர சிங் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள்.
ஆஷா குமாரி
இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியமான பெண் தலைவரான ஆஷா குமாரி, சத்தீஸ்கர் காங்கிரஸ் அமைச்சர் டி.எஸ். சிங்கின் சகோதரி ஆவார். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரும் முதல்வர் ரேஸில் இருக்கிறார். இவர்களோடு, ஹர்ஷ்வர்தன் சவுகான், ராஜேஷ் தர்மானி ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கான போட்டி பட்டியலில் அடிபடுகிறது.
தலைமை முடிவு செய்யும்
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி போராடி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் நிலையில், அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதை காங்கிரஸ் தலைமை தேர்ந்தெடுக்கும். இதனால், இமாச்சல் பிரதேச காங்கிரஸில் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.