ஜார்கண்ட் சட்டசபைக்கு நாளை தேர்தல்: இங்கு ஆளும் கட்சியின் பலவீனம், பாஜகவின் பலம்
டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளுக்கு நாளை தொடங்கி 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஜார்கண்டில் முதல் கட்டமாக நாளை 13 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடக்கிறது.
ஜார்கண்டில் ஆளும் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணிக்கு இடையிலான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கூட்டணி முறிந்தது. கடந்த மக்களவை தேர்தலில், ஜார்கண்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 12 இடங்களை பாஜ கைப்பற்றியது. இதையடுத்து சட்டசபை தேர்தலிலும் தனித்து களம் இறங்க பாஜ முடிவு செய்துதுள்ளது.
ஜார்கண்டில் ஆளும் கட்சி மீதான அதிருப்தி அதிகமாக உள்ளது. இதை கூறி காங்கிரஸ் வாக்கு வேட்டையாடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனெனில் சமீப காலம் வரை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், காங்கிரசும் தோஸ்துகளாக இருந்தவை. எனவே இதன் லாபம் முழுக்க பாஜகவுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்திலும் மோடி அலை வீசுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மாநிலத்தில் ஆட்சிக்கு எதிராக உருவாகியிருக்கும் அலையை, மோடி அலை கபளீகரம் செய்து பாஜகவுக்கு பெரும் வெற்றியை ஈட்டித்தரும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் பாஜக கேட்டதைப்போல, எங்களுக்கு முதல்முறையாக ஒரு வாய்ப்பை தாருங்கள் என்று இங்கு பாஜக கேட்க முடியாது.
ஏற்கனவே ஜார்கண்டில் பாஜக ஆட்சி செய்துள்ளது. எனவே மோடிக்கு தேர்தல் சற்று அக்னி பரிட்சையாகவே இருக்கப்போகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் பலவீனம் ஜார்கண்டில் பாஜகவுக்கு பலமாக மாறப்போகிறது.