சட்டசபை தேர்தலை முன்வைத்து பாஜக அதிரடி வியூகம்.... குஜராத் முதல்வராகிறார் அமித்ஷா?
டெல்லி: குஜராத் மாநில பாஜக முதல்வர் ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித்தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அவரது முடிவை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
பாஜக அரசில் 1998-ம் ஆண்டிலிருந்து அமைச்சராக இருந்து வந்தார் ஆனந்திபென் படேல். 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதால் தான் வகித்து வந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மோடிக்கு பிறகு அந்த பதவிக்கு வந்தவர் ஆனந்தி பென் பட்டேல்.
பதவியேற்றது முதல் பல்வேறு பிரச்சனைகளையும், பட்டேல் இன மக்கள் நடத்திய போராட்டத்தையும் அடக்க முடியாமல் திணறினார். இந்நிலையில், நவம்பர் 21-ம் தேதி தனக்கு 75 வயதாவதைக் குறிப்பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆனந்தி பென் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பாஜகவுக்கு புதிய முகம் தேவை என்றும், இதற்காக தனது பதவியை விட்டுத்தருவதாகவும் ஆனந்தி பென் குறிப்பிட்டார். மேலும், தனது ராஜினாமா முடிவு பற்றிய கடிதத்தை குஜராத் பாஜக தலைவர், விஜய் ரூபனியிடம் அளித்தார். பாஜக தலைவர்கள் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குஜராத் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் சுகாதார அமைச்சராக இருக்கும் நிதின் பட்டேல், கல்வி அமைச்சர் பூபேந்தர்சிங், நிதி அமைச்சர் சவுரபாய் பட்டேல் மற்றும் மாநில பாஜக தலைவர் விஜய்ரூபனி ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி பாஜக வெற்றி பெறவில்லை. எனவே அமித் ஷா போன்ற ஒரு பிரபலமானவரை முதல்வராக்கி தேர்தலை சந்திக்க பாஜக தலைமை திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.