நம்மிடம் மோதினால் அழிவுதான்.. ரம்ஜான் விழாவில் மமதா பானர்ஜி பகிரங்க எச்சரிக்கை
கொல்கத்தா: யாரெல்லாம் நம்முடன் மோதுகிறார்களோ, அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதுதான் நமது கோஷம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அவர் முஸ்லீம்கள் மத்தியில் உரையாற்றியபோது, அரசியல் எதிராளிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை கொடுக்க அவர் தயங்கவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில், பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மமதா பானர்ஜிக்கு ஷாக் கொடுத்தது.
திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மமதா பானர்ஜி இன்று முஸ்லீம்கள் மத்தியில் ஹிந்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
விட்டுக்கொடுத்தலுக்கு, இந்துக்களும், ஒற்றுமைக்கு முஸ்லிம்களும், அன்புக்கு கிறிஸ்தவர்களும், தியாகத்திற்காக சீக்கியர்களும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். இதுதான் நமது அன்பிற்குரிய இந்தியா. இந்த ஒற்றுமையை நாம் பாதுகாப்போம். நம்முடன் யாரெல்லாம் மோதுகிறார்களோ, அவர்கள் எல்லாம் அழிக்கப்படுவார்கள் என்பதே நமது கோஷம். இவ்வாறு மமதா பானர்ஜி தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், இங்கு பயப்படுவதற்கு எதுவும் கிடையாது. சில நேரங்களில் சூரியன் உதயமாகும் போது அதன் ஒளிக்கதிர்கள் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஆனால், சற்று நேரம் கழித்து அவை மங்கலாகி விடும். எந்த அளவுக்கு வேகமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றினார்களோ, அதே அளவுக்கு வேகமாக அவர்கள் வெளியேறத் தான் போகிறார்கள், என்று பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜி தெரிவித்தார்.
Today, like previous years, I attended #Eid prayers at Red Road and exchanged greetings with all.
— Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2019
Some pictures of the occasion are uploaded here for all of you. #EidMubarak once again pic.twitter.com/I9gsNAZZuO
தேர்தலுக்கு, முன்னதாக, மமதா பானர்ஜி பயணித்த வாகனத்தை, சுற்றிலும் நின்று கொண்ட பாஜக தொண்டர்கள், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். காரிலிருந்து இறங்கி வந்து அவர்களை மமதா பானர்ஜி எச்சரித்தார்.
மேலும், மேற்குவங்கத்தில், 'ஜெய் மா காளி' என்று தான் சொல்ல வேண்டும், அல்லது ஜெய்ஹிந்த் என்று சொல்ல வேண்டும், என்று மமதா பானர்ஜி தெரிவித்தார். மதரீதியாக மேற்கு வங்கத்தில் பாஜக பிளவை ஏற்படுத்தி வருவதாக மமதா குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.