போஸ்டரில் பெரியார், அம்பேத்கர்.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்.. பலே திட்டங்கள்!
இந்தியாவில் இருக்கும் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படித்த 50 முன்னாள் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து கட்சி தொடங்கி இருக்கிறார்கள். பட்டியலின, தலித், பழங்குடியின மக்களுக்காக உழைக்க
டெல்லி: இந்தியாவில் இருக்கும் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படித்த 50 முன்னாள் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து கட்சி தொடங்கி இருக்கிறார்கள். பட்டியலின, தலித், பழங்குடியின மக்களுக்காக உழைக்க போவதாக இவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
2015 காலகட்டங்களில் கல்லூரி படித்து முடித்த இவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த கட்சியை தொடங்கி இருக்கிறார்கள். இந்த கட்சிக்கு பகுஜன் ஆசாத் கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
இவர்களின் திட்டம், குறிக்கோள் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. இதற்காக இவர்கள் தாங்கள் பார்த்த வேலைகளை விட்டுவிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிக்கோள்
இந்த கட்சியில் இருக்கும் பெரும்பாலான நபர்கள் பட்டியலின, தலித், பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ள பட்டியலின, தலித், பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள் என்று கூறப்படுகிறது. கல்லூரியில் படிக்கும் சமயத்தில் இருந்தே இந்த ஆசை இருந்ததாக அவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
யார் இவர்கள்
டெல்லி ஐஐடியில் 2015ல் படித்து முடித்த நவீன் குமார் என்ற இளைஞர்தான் இந்த கட்சிக்கு தலைமை வகிக்கிறார். இவர்கள் எல்லோரும் தாங்கள் பார்த்த லட்சக்கணக்கான சம்பளம் கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு இந்த கட்சியை தொடங்கியுள்ளனர். இப்போது, இந்த கட்சியை இவர்கள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
இந்த தேர்தல் கிடையாது
இவர்கள் அடுத்த வருடம் நடக்க இருக்கும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கூறியுள்ளனர். உடனே தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்து, சிறிய கட்சியாக மாற விருப்பமில்லை என்று கூறியுள்ளனர். 2020ல் நடக்கும் பீகார் மாநில தேர்தலில் போட்டியிட்டு, பின் அதற்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க போட்டியிடுவோம் என்று கூறியுள்ளனர்.
சமூக வலைதள பிரச்சாரம்
இவர்கள் கட்சி பெயர் மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்களின் சமூக வலைதள புகைப்படங்களில், அம்பேத்கர் புகைப்படமும், அப்துல் கலாம் புகைப்படமும், பெரியார் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. இவர்கள் இப்போதே சமூக வலைத்தளங்களில் அவர்களின் கட்சி குறித்து பேச தொடங்கிவிட்டனர். அதே போல் இந்த கட்சிக்கு இணையதள இளைஞர்கள் ஆதரவு அளிக்க தொடங்கியுள்ளனர்.
என்ன கொள்கை
இந்தியாவில் இருக்கும் வறுமையான மக்களுக்கும், பட்டியலின, தலித், பழங்குடியின மக்களுக்கும் உழைக்க வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோளாம். இவர்களுக்கு தரமான கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இவர்கள் முக்கியமான நோக்கம் என்றுள்ளனர். விரைவில் புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம் என்றுள்ளனர்.