மேயர் முதல் குஜராத் முதல்வர் வரை... விஜய் ரூபானி கடந்து வந்த பாதை !
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் நம்பிக்கைக்குரிய விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக பட்டேல் சமூகத்தை சேர்ந்த நிதின் பட்டேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல்(75), வயது முதிர்வு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார். ஆனந்தி பென் ராஜினாமாவுக்கு தலித் மற்றும் படேல் இனத்தவர்களின் போராட்டமும் காரணமாகக் கூறப்பட்டது.
அடுத்த ஆண்டு குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் ஒரு பிரபலமானவரை முதல்வராக்கி தேர்தலை சந்திக்க பாஜக தலைமை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிதின் படேல், துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவருக்கும் விஜய் ரூபானி மிகவும் நெருக்கமானவர்.
விஜய் ரூபானி:
- ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த விஜய் ரூபானி (60), பி.ஏ. மற்றும் எல்.எல்.பி பட்டம் பெற்றவர்.
- ஆரம்ப காலத்தில் ஏபிவிபி.யில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர் 1971 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் சங்கத்தில் இணைந்தார்.
- ராஜ்கோட் மாநகராட்சியின் மேயராகவும், மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
- கடந்த 2014ஆம் ஆண்டில் குஜராத் மாநில சபாநாயகராக இருந்த வஜூபாய் வாலாவின் ராஜினாமாவை அடுத்து ராஜ்கோட் மேற்கு சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
- மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது விஜய் ரூபானி மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார்.
- போக்குவரத்து, குடிநீர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.