ஓட்டு படுத்துற பாடு- அந்தமான் தீவின் ஹரியத் சிகரத்துக்கு மணிப்பூர் பெயரை சூட்டிய அமித்ஷா!
இம்பால்: மணிப்பூர் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் அந்தமான் தீவின் ஹரியத் சிகரத்துக்கு மவுண்ட் மணிப்பூர் என பெயர் சூட்டியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அந்தமான் நிக்கோபார் தீவில், சுபாஷ் சந்திரபோஷ் தேசிய கொடி ஏற்றிய இடத்தில் ரூ.299 கோடி மதிப்பிலான 14 திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைத்தார். மேலும் ரூ.643 கோடி மதிப்பிலான 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அந்தமானில் நேதாஜி பாலம்
அத்துடன் புதிய பாலம் ஒன்றுக்கு ஆசாத் ஹிந்த் ஃபோஜ் என நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஆசாத் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் பெயர் சூட்டினார். அதேபோல் அந்தமான் தீவுகளின் ஹரியத் சிகரத்துக்கு மவுண்ட் மணிப்பூர் எனவும் அமித்ஷா பெயரிட்டார்.
மணிப்பூர்-அந்தமான் தொடர்பு
அந்தமானுக்கும் மணிப்பூருக்கும் என்ன தொடர்பு? அந்தமான் தீவுகளின் சிகரத்துக்கு மணிப்பூரின் பெயரை ஏன் சூட்டினார் அமித்ஷா? என்கிற கேள்வி இயல்பாகவே எழும். இந்த கேள்விக்கான விடையை படிக்கும் முன்னர் ஒரு நினைவூட்டலாக இந்த தகவல்.. தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள கோகினூர் மாளிகைக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வரான மறைந்த ஷேக் அப்துல்லாவின் பெயர் சூட்டப்பட்டு ஷேக் அப்துல்லா மாளிகை என அழைக்கப்படுகிறது. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு கொடைக்கானல் கோகினூர் பங்களாவில்தான் வீட்டு சிறை வைக்கப்பட்டார். 2 ஆண்டுகாலம் இங்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால் ஷேக் அப்துல்லா மாளிகை என்று அழைக்கப்படுகிறது. இப்போது மணிப்பூருக்கும் அந்தமானுக்கான பந்தம் குறித்து பார்க்கலாம்.
ஆங்கிலோ-மணிப்பூர் யுத்தம்
1890-ம் ஆண்டு மணிப்பூரில் மகாராஜா சூர்சந்திர சிங்குக்கு எதிராக சேனாதிபதி திகேந்திரஜித் சிங் தலைமையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றது. திகேந்திரஜித்சிங் வெற்றி பெற்று குலசந்திரசிங் மகாராஜாவாக மகுடம் சூட்டினார். அரியாசனத்தை இழந்த சூர்சந்திரசிங், பிரிட்டிஷாரிடம் தஞ்சமடைந்தார். கொல்கத்தா சென்று ஆங்கிலேயரின் பாதுகாப்பில் சூர்சந்திரசிங் இருந்தார். பின்னர் மணிப்பூர் விவகாரத்தில் ஆங்கிலேயர்கள் தலையிட்டனர். இதுவே யுத்தமாக மாறியது. முதல் கட்ட யுத்தத்தில் ஆங்கிலேய படைகள் தோல்வி அடைந்தன. 2-வது கட்ட யுத்தத்தில் மணிப்பூரின் 3 திசைகளில் இருந்தும் ஆங்கிலேய படைகள் உக்கிர தாக்குதல் நடத்தின. கோஞ்ஜோம் யுத்தம் என்கிற வரலாற்று பக்கங்களில் இடம்பெற்ற யுத்தம் இதுதான். இந்த யுத்தத்தின் முடிவில் சேனாதிபதி திகேந்திரஜித் சிங் உள்ளிட்ட 4 பேர் தூக்கிலிடப்பட்டனர். மகாராஜா குலசந்திரசிங் உள்ளிட்ட 22 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்தமானில் மணிப்பூர் மகாராஜா குலசந்திரசிங் உள்ளிட்டோர் சிறைவாசம் அனுபவித்த இடம்தான் ஹரியத் மலைப்பகுதி.
சட்டசபை தேர்தல் கணக்கு
இதன் நினைவாகவே ஹரியத் சிகரத்துக்கு மவுண்ட் மணிப்பூர் என பெயர் சூட்டியிருக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. மணிப்பூர் மக்கள் மீது அமித்ஷா திடீரென காட்டும் இந்த கரிசனத்துக்கு காரணமே அங்கு அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல்தான். மணிப்பூர் மக்கள் இன்றும் கோஞ்ஜோம் யுத்த தினத்தை கடைபிடித்து வருகின்றனர். இன்றளவும் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டு மாண்டு போன மகாராஜா குலசந்திரசிங்கின் சிறைவாசம் நினைவுகூறப்பட்டு வருகிறது. இதனை வாக்குகளாக அறுவடை செய்யும் வகையில்தான் தற்போது அந்தமான் ஹரியத் சிகரத்துக்கு மவுண்ட் மணிப்பூர் எனப் பெயரிட்டிருக்கிறார் அமித்ஷா. இந்த அறிவிப்புக்கு மணிப்பூர் தலைவர்கள் அரசியல் பாகுபாடு இல்லாமல் நெகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கின்றனர். ஆம் அமித்ஷா நினைத்தபடியே எல்லாம் நன்றாக நடக்கிறது மணிப்பூரில்- எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு!