மசூதி விவகாரம்.. ஏன் இந்த வழக்கு? என்ன பின்னணி?
முஸ்லிம் வழிபாட்டில் மசூதி அவசியமா என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
Recommended Video
டெல்லி: அயோத்தி துணை வழக்கில் மசூதி தொடர்பான வழக்கின் மேல் முறையீட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று அளித்துள்ள தீர்ப்பால் அயோத்தி பிரதான வழக்கு விரைவு பிடிக்கவுள்ளது.
1994ம் ஆண்டு பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தை கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்கில், வழிபாட்டுக்கு மசூதிகள் முக்கியமல்ல. தொழுகையை எங்கிருந்து வேண்டுமானாலும் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டதே இந்த மேல் முறையீட்டு மனு. இந்த வழக்கின் தீர்ப்பு மெயின் வழக்கின் தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் இதன் தீர்ப்பும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இரண்டு மாதியான வாதம்
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம்தான் பிரச்சனைக்கு காரணம். ராமர் ஜென்மபூமி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதே சமயம் இஸ்லாமியர்கள், இங்கு பல நூறு வருடமாக நாங்கள் மசூதி வைத்து வழிபட்டு கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
என்ன பிரச்சனை
1991ம் ஆண்டு உத்தர பிரதேச அரசு, இந்த மசூதி இருந்த இடத்தை சுற்றி இருந்த நிலங்களை கையகப்படுத்தியது. அங்கு ராமர் கோவில் கட்ட போகிறோம், அதற்காக வசதியாக நிலம் வேண்டும் என்று நிலத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. மிகப் பெரும் கலவரத்திற்கு இது வித்திட்டது.
வழக்கும் தீர்ப்பும் என்ன?
மசூதி இடிப்பிற்கு எதிராக 2002ல் அலஹாபாத் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. செப்டம்பர் 30, 2010ல் இதில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் இந்த சர்ச்சைக்கு உரிய நிலத்தை உபி சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு பிரித்து எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இடையில் போடப்பட்ட வழக்கு
1991ல் உத்தர பிரதேச அரசு பாபர் மசூதி நிலத்தை கையகப்படுத்திய போது அதற்கு எதிராக டாக்டர் எம் இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் வழக்கு தொடுத்தார். 1994ல் இதற்கு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மசூதி என்பது இஸ்லாமில் ஒரு அடிப்படை அங்கம் கிடையாது. இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகலாம். இதனால் மசூதியை அத்தியாவசிய தேவை என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறியது.
இதை எதிர்த்து முறையீடு
இந்த 1994 தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்கப்பட்டது. பல இஸ்லாமிய அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது. இதில் மசூதி என்பது அடிப்படை தேவை, இஸ்லாமில் அடிப்படை அங்கம் என்று மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நடந்தது.
மெயின் வழக்கு விரைவாகும்
இந்த வழக்கில் இஸ்லாமிய அமைப்புகள் வைத்த கோரிக்கை மிக முக்கியமானது. அதாவது அரசியல் சாசன அமர்வுதான் இந்த மறுசீராய்வு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியது. 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மறுசீராய்வு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இருப்பினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தீர்ப்பின் மூலம் முக்கிய வழக்கு விரைவுபடுத்தப்படவுள்ளது.