நடக்காத ஓட்டு ஸ்விங்.. மோடி, அமித் ஷா முட்டி மோதியும்.. மேற்கு வங்கத்தில் பாஜக தோற்றுப்போனது ஏன்?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் வாக்கு வங்கியிலிருந்து பாஜகவால் அதிக ஓட்டுக்களை பெற முடியவில்லை என்பதால்தான், சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல், தோற்றது என்று சர்வே ஒன்று தெரிவிக்கிறது.
2019 மக்களவைத் தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் பாஜக 18 தொகுதிகளை வெல்ல முக்கிய காரணம் பாரம்பரிய இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் வாக்குகளை பாஜக ஈர்த்ததுதான் காரணம்.
நகர பேருந்துகளில் இலவச பயணம்.. குடும்ப செலவுக்கு கூடுதல் பணம் கிடைக்கிறது.. பெண்கள் உற்சாக வரவேற்பு
இந்த முறை அப்படியான வாக்கு மாற்றம் அதிகம் நிகழவில்லை.
லோக்சபா தேர்தல்
லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் என்.இ.எஸ் நடத்திய சர்வேயில், 2019 லோக்சபா தேர்தலுக்கு பிறகு எடுத்த சர்வேயுடன் இப்போது எடுத்த சர்வே ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. ஐந்தில் இரண்டு பங்கு இடதுசாரி ஓட்டுக்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தனர். இது எதிர்பாராத வெற்றியை அடைய உதவியது.
பாரம்பரிய ஓட்டு
2021 தேர்தலில் வெற்றிபெற பாஜகவுக்கு இரண்டு விஷயங்கள் தேவைப்பட்டன. ஒன்று இடதுசாரி மற்றும் காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியிலிருந்து பெரிய ஸ்விங் நிகழ வேண்டும். அல்லது இதுவரை எந்த கட்சியும் சாராத வாக்காளர்களை கணிசமான அளவில் அணிதிரட்ட வேண்டும். இந்த இரண்டு கணக்குகளிலும் பாஜக தோல்வியடைந்ததாக தெரிகிறது.
குறைவாக வந்துள்ளது
வாக்கெடுப்புக்கு பிந்தைய சர்வேப்படி, பாஜக, இடதுசாரி வாக்காளர்களில் 33% மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களில் 25% ஓட்டுக்களை மட்டுமே தனது பக்கம் இழுத்துள்ளது உறுதியாக தெரிகிறது. இது 2019ல் வந்த ஓட்டுக்களை விட 6 முதல் 7 சதவீதம் குறைவாகும்.
பொதுவான ஓட்டுக்கள்
எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காத வாக்குகளை ஈர்க்க தவறியதும், பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 34% பேர் மமதா அரசை மாற்ற விரும்பினர். ஆனால், அப்படியான எண்ணம் கொண்டவர்களில் 5ல் ஒருவர்தான் பாஜகவுக்கு ஓட்டு போட்டுள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வு கூறுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மொத்த, மத்திய அமைச்சரவையும், மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்தும், பாஜக 77 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது.