ம.பியில் காங். வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறிய பாஜக.. ஏன்?
மத்திய பிரதேசத்தில் பாஜக தோல்வியுற என்ன காரணம்?
Recommended Video
போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பத்திலிருந்தே பின்னடைவில் இருந்த பாஜக தற்போது முன்னிலை வகித்து வந்தாலும் கூட மிகப் பெரிய சரிவை அது சந்தித்துள்ளது. இந்த 2 காரணங்கள்தான் ம.பி.யில் பாஜக இப்படி தடுமாற காரணமாக இருந்திருக்கிறது.
ஊழலற்ற அரசு எங்களுடையது என்று மார் தட்டி வந்த மோடிக்கு பகிரங்கமாகவே வியாபம் ஊழலில் ஈடுபட்டு ஆப்பு வைத்தவர் சிவராஜ் சிங் சௌகான். இதை தவிர பா.ஜ.க அரசின் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
ஆன்லைனில் ஒப்பந்த ஏலம் விடுவதிலும் பல்லாயிரம் கோடி ஊழலில் சிக்கியதே தற்போது பின்னடைவுக்கு காரணமாக இருக்கிறது.
வண்டவாளம்
அம்மாநில மின்னணு மேம்பாட்டுக் கழகம் (MPSEDC) மற்றும் TCS நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் ஆன்லைன் ஏலம் விடும் முறை கொண்டு வரப்பட்டது. இது எப்போது நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டதோ, அப்போதுதான் இவரது வண்டவாளமும் தண்டவாளம் ஏறியது.
விசாரணை
ஏலம் விடும் ஆணையத்திலிருந்து குரு என்பவர் உருவாக்கப்பட்ட ஆன்லைன் முறையில், எங்கேயோ "இடிக்குதே" என்று உணர்ந்து மாநில மின்னணு மேம்பாட்டுக் கழகத்திடமே புகார் தெரிவித்தார். இது சம்பந்தமாக முறைப்படி விசாரணையும் நடத்தப்பட்டது.
வெளிச்சத்துக்கு வந்தது
அப்போதுதான் ஆன்லைன் ஏலம் விடப்படும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைப்பு முறையிலேயே மாற்றம் செய்திருப்பதை கண்டறிந்தார். இதை வெளிச்சத்துக்கும் கொண்டு வந்தார். விளைவு, உண்மையை கண்டறிந்த மின்னணு மேம்பாட்டுக் கழக தலைமை இயக்குநர் மணிஷ் ரஸ்தோகியை இன்னொரு துறைக்கு பணிமாற்றம் செய்து தூக்கி அடித்தது.
கடும் விமர்சனம்
இதைதான் காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. கடுமையான விமர்சனங்களை பாஜக மீது வைத்தது. எப்படியும் இந்த விவகாரத்தில் சுமார் 8000 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்திருக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்தது. இதைத்தான் முக்கிய பிரச்சாரங்களில் ஒன்றாகவும் காங்கிரஸ் முன்னிறுத்தியது.
கையெழுத்து
ஏனென்றால், இந்த ஏலம் விடப்படும்போது, சிவராஜ் சிங் சௌகானின் கையெழுத்து ரொம்ப அவசியமாகும். அவரது கையெழுத்திற்கு பெற்ற பிறகுதான் ஏலமே விடப்படும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது.
பின்னடைவு
எனவேதான் வியாபம் மற்றும் ஆன்லைனில் ஒப்பந்த ஏலம் விடுவதில் முறைகேடு என்ற இந்த இரண்டு காரணங்கள்தான் பாஜகவுக்குபெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறப்படுகிறது.