மாற்றி விடுவதற்கு ஆள் இல்லாததால் தப்பித்தார் பொன். ராதாகிருஷ்ணன்!
டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்திலிருந்து பொன். ராதாகிருஷ்ணன் தப்பியுள்ளார். அவரை விட்டால் தமிழகத்தில் வேறு எம்.பிக்கள் பாஜகவுக்கு இல்லாத காரணத்தால் அவரை தூக்கவில்லை என்று தெரிகிறது.
மத்தியில் மோடி அரசு அமைந்தபோது அமைச்சராக பதவியேற்றார் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அது கன்னியாகுமரி. அதில் வென்றவர் பொன். ராதாகிருஷ்ணன்.
இதன் காரணமாக பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவரது கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெற்ற இன்னொருவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். ஆனால் அவருக்குப் பதவி தரவில்லை மோடி. இந்த கடுப்பில்தான் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறியது பாமக.
இந்த நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் மீது ஏகப்பட்ட அதிருப்தி நிலவுகிறது. சட்டசபைத் தேர்தலில் வலுவான கூட்டணி அமையாமல் போய் பாஜக படு தோல்வியைச் சந்தித்தது.
கட்சிக்குள் நிலவிய கடுமையான உட்கட்சிப் பூசலால் வேட்பாளர் தேர்வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த வகையில் பொன். ராதாகிருஷ்ணன் மீது பாஜக மேலிடத்திற்கு கடும் அதிருப்தி உள்ளது.
அடுத்து குளச்சல் துறைமுகம் தொடர்பாக அவர் பேசிய சில பேச்சுக்களை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை. தேவைப்பட்டால் பதவியை தூக்கி எறிவேன் என்று அவர் கூறியதையும் பாஜக மேலிடம் ரசிக்கவில்லை.
இப்படி சின்னச் சின்னதாக நிறைய அதிருப்திகள் உள்ளன. ஆனாலும் அவரது மத்திய அமைச்சர் பதவியை பறிக்கவில்லை கட்சி மேலிடம். காரணம், அவரை விட்டால் தற்போது தமிழகத்தில் வேறு யாரும் இல்லை என்பது ஒரு காரணம். அதை விட முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல், அடுத்து லோக்சபா தேர்தல் வரும் நிலையில் தமிழத்தில் மத்திய அமைச்சர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டால் அதை வைத்து மற்ற கட்சியினர் கிண்டலடிக்கலாம், மக்கள் மத்தியில் தேவையில்லாத தர்மசங்கடத்தை சந்திக்க நேரிடும் என்பதால் பொன். ராதா மீது இப்போதைக்கு கட்சி மேலிடம் கை வைக்கவில்லையாம்.