எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக இருக்கலாமா?... பார் கவுன்சில் அதிரடி நோட்டிஸ்!
எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்வது சரியா என்று பார் கவுன்சில் கேள்வி எழுப்பி இருக்கிறது.
டெல்லி: எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்வது சரியா என்று பார் கவுன்சில் கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர்களாக இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு பார் கவுன்சில் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் சில எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்து வருகின்றனர். மேலும் இதில் சிலர் மிகவும் முக்கியமான வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் பெரிய வழக்குகளில் இவர்கள் ஆஜராவது வழக்கம்.
இந்த நிலையில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் பார் கவுன்சிலிடம் அளித்த மனுவில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்வது குறித்து விளக்கம் கேட்டு இருந்தார். எம்.பி, எம்.எல்.ஏக்கள் மக்கள் பணி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதற்காகத்தான் அவர்களுக்கு அரசு சம்பளமும் தரப்படுகிறது.
இப்படி அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு இன்னொரு பணி செய்வது சரியா என்று கேட்டு இருந்தார். எம்.பி, எம்.எல்.ஏக்கள் இரட்டை குதிரையில் பயணிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தையும் சேர்த்து இதுபோல 500க்கும் அதிகமான எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் அனைவருக்கும் பார் கவுன்சில் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து வரும் 21ம் தேதி நடக்கும் பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது. அதேபோல் வேறு இடங்களில் மாத சம்பளம் வாங்கிக் கொண்டு வழக்கறிஞராக இருப்பதும் பார் கவுன்சில் விதிக்குள் வருமா என்றும் விவாதிக்கப்பட உள்ளது.