வெளிநாடு தப்பிய குற்றவாளிகளை கோட்டை விட்டு, திரும்பி வந்த கார்த்தி சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ!
Recommended Video
டெல்லி: வங்கி மோசடிகளில் மத்திய அரசு விசாரணை ஏஜென்சிகளுக்கு அல்வா கிண்டி கொடுத்துவிட்டு வெளிநாடுகளில் ஜாலியாக செட்டிலானவர்களை கைது செய்ய முடியாத நிலையில், வெளிநாடு சென்றுவிட்டு சொன்னபடி திரும்பி வந்த கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.
வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கிய லலித் மோடி உள்ளிட்ட பலரும் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் ஜாலி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களை இந்தியா கொண்டுவரும் முயற்சி என்பது, சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட கருப்பு பணத்தை மீட்கும் வாக்குறுதியை போலவே கானல் நீராக போய்விட்டது.
நீதிமன்றம் அனுமதி
இந்த நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு சென்றால் தப்பிவிடுவார் என்ற சிபிஐ வாதத்தை சென்னை ஹைகோர்ட் நிராகரித்து இங்கிலாந்து செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி வழங்கியது.
சொன்னபடி திரும்பினார்
கோர்ட்டில் அளித்த உத்தரவாதத்தின்படியே சொன்னபடி தாயகம் திரும்பினார் கார்த்தி சிதம்பரம். ஆனால், ஏதோ வெளிநாடு தப்பி செல்பவரை கடைசி நிமிடத்தில் சேஸ் செய்து வந்து விமான நிலையத்தில் பிடிக்கும் சினிமா போலீஸ் போல, சென்னை விமான நிலையத்தில் வைத்து கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கவனிக்க.. கைது செய்யப்படும்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பவில்லை, வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்.
என்ன சொல்ல வருகிறது அரசு?
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கார்த்தி சிதம்பரம் ஏன் இந்தியா திரும்பி வந்தார், நீரவ் மோடியை போல வெளிநாட்டிலேயே தங்கியிருந்து கல்தா கொடுத்திருக்கலாமே என்று கேட்காமல் கேட்பதை போல உள்ளது என கூறுகிறார்கள் பொருளாதார விவகாரங்களை கவனிக்கும் பத்திரிகையாளர்கள்.
தேவையா நடவடிக்கை?
உத்தரவாதம் அளித்தபடி, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து, நியாயமாக நடந்து கொண்டால் கைது நடவடிக்கையும், அல்வா கொடுத்து கம்பி நீட்டி வெளிநாடு சென்றால் ராஜ வாழ்க்கையும் வாழலாம் என்ற சூழலை மறைமுகமாக உருவாக்கி வருகிறது மத்திய அரசு.