மாநிலங்களில் காங்கிரஸை காவு கொள்ளவிட்டு டெல்லி மேலிடம் அலட்சியாக இருப்பது ஏனோ?
வடகிழக்கு மாநிலங்களில் கட்சியை காவு கொள்ளவிட்டு டெல்லி காங்கிரஸ் மேலிடம் குறட்டை விட்டுக் கொண்டிருந்தது என்பது அக்கட்சியின் மாநில தலைவர்கள் குற்றச்சாட்டு.
குவஹாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி டெல்லி மேலிடத்தின் படுமோசமான அலட்சியத்தால் இருப்பை தொலைத்துவிட்டு நிற்கிறது என்பது அக்கட்சியின் தலைவர்களின் புலம்பல்.
அருணாச்சல், அஸ்ஸாமில் தொடங்கி மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் பாஜக தலையெடுத்துள்ளது. திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றியும் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு எந்த அடிப்படை அமைப்பு பலமும் இல்லை. அதன் ஒரே நம்பிக்கையாக இருந்தது காங்கிரஸ்தான்.
தடுக்காத டெல்லி
காங்கிரஸ் கட்சியை உடைத்து அதன் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை வளைத்து தொண்டர்களையும் கபளீகரம் செய்து சொந்த வெற்றி போல பாஜக காட்டி வருகிறது. இப்படி மாநிலங்களில் காங்கிரஸ் கரைந்து போவதைத் தடுக்க டெல்லி மேலிடம் எந்த முயற்சியுமே எடுக்கவில்லை என்றுதான் கூறப்படுகிறது.
ஒரு பொறுப்பாளர்
பாஜகவைப் பொறுத்தவரை வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்து ஆண்டுகள் கணக்கில் முகாம் போட்டு காங்கிரஸை ஏப்பம் விட்டு வருகிறது. ஆனால் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலத்துக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்த கையோடு கடமை முடிந்தது என டெல்லி மேலிடம் ஒதுங்கிக் கொண்டது.
தேர்தல்களில் அக்கறையும் இல்லை
அதனால்தான் வடகிழக்கில் கட்சியே காணாமல் போவது கூட தெரியாமலா குறட்டை விடுகிறது டெல்லி? என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். வடகிழக்கு தேர்தல்களைப் பற்றி டெல்லி அக்கறையே காட்டவில்லை.
வலிமையான தலைமை இல்லை
டெல்லி மேலிடத் தலைவர்கள் பிரசாரத்துக்கும் போகவில்லை.. செலவுக்கும் கூட பணம் தரவில்லை என்கின்றனர் நாகாலாந்து மாநில காங்கிரசார். விஸ்வரூபமெடுக்கும் பாஜகவின் வியூகங்களுக்கு செக் வைக்கும் வலிமை டெல்லி மேலிடத்தில் இல்லைதான் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் அப்பட்டமாக காட்டுகின்றன.