அடுத்த தலைவலி.. குமாரசாமி கட்சியுடன் கூட்டணி வைப்பதா.. காங். லிங்காயத்து எம்எல்ஏக்கள் அதிருப்தி
ஆட்சியமைக்க மஜதவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதால், காங்கிரஸில் இருக்கும் லிங்காயத் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பெங்களூரு : மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதால், காங்கிரஸைச் சேர்ந்த லிங்காயத் தலைவர்கள் கட்சித் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியானது. மொத்தம் 222 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியான நிலையில், பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையான இடங்கள் கிடைக்காததால், அங்கு யார் ஆட்சி அமைப்பது என்கிற சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு வழங்கியது.
எடியூரப்பா முதல்வர்
ஆனால், காங்கிரஸ் - மஜத ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர், பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். இதுதொடர்பான வழக்கு அவசரவழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்தது. இதனால் இன்று காலை பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு இன்னும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைகள் துவங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணியை விரும்பாத காங்கிரசை சேர்ந்த லிங்காயத் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் பேசி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சித்தராமையா தோல்வி
இதுகுறித்து காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகையில், லிங்காயத்தை தனி மதமாக அறிவித்தது தேர்தலில் கை கொடுக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்த நிலையில், அது மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்துள்ளது. அதே நேரம் காங்கிரஸைச் சேர்ந்த லிங்காயத் தலைவர்களும் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். லிங்காயத்துகள் அதிகமாக வசிக்கும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் களமிறங்கிய சித்தராமையா மஜத கட்சியின் வேட்பாளரும், வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவருமான ஜி.டி தேவகவுடாவிடம் 36000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
தலைவர்கள் கடும் அதிருப்தி
அதே நேரம் காங்கிரஸைச் சேர்ந்த லிங்காயத் தலைவர்களான வினய் குல்கர்னி, சரண் பிரகாஷ் பாட்டில், பசவராஜ் ராயாராடி ஆகிய மூவரும் பாஜகவினரிடம் தோல்வியைத் தழுவினர். அதே நேரம் லிங்காயத் பிரச்னையால் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த மக்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த நிலையில், அவர்களுக்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுப்பதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
எடியூரப்பாவிற்கு ஆதரவு
இந்த பிரச்னை வரவிருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அவர் எதிர்ப்பார்க்கிறார்கள். மேலும், வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த குமாரசாமிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது, காங்கிரஸை லிங்காயத் இன மக்களிடம் இருந்து தள்ளிவைக்கும் என்றும், அதே சமயம் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவரான எடியூரப்பாவிற்கு ஆதரவை அதிகரிக்கச்செய்யும் என்பதால், காங்கிரஸ் கட்சியில் உள்ள லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த் சிங், ராஜசேகர் பாட்டில், எம் ஒய் பாட்டில் மற்றும் நாகேந்திரா ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர். பெரும்பான்மைய நிரூபிக்க வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், எம்.எல்.ஏ.,க்களின் அதிருப்தி காங்கிரஸ் கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.