லோக்சபா தேர்தல் முடிவு வெளியான நாளில் ப. சிதம்பரம் ஏன் அப்படி செய்தார்?: பாஜக கேள்வி
Recommended Video
டெல்லி: 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்று 7 தனியார் நிறுவனங்களுக்கு தங்கம் இறக்குமதி சலுகை அளித்தார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்று பாஜக சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிபிஐ அதிகாரிகளால் கடந்த 28ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது. சிக்கலில் உள்ள பணத்தின் உண்மையான மதிப்பை வங்கிகளின் பதிவேடுகளில் பதியாமல் பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டது.
அவர்களின் கடந்த 6 ஆண்டு கால ஆட்சியில் வங்கிகள் கொடுத்த முன்பணம் ரூ. 52 லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.(அது 2008ம் ஆண்டில் ரூ. 18.06 லட்சம் கோடியாக இருந்தது.) அதில் 36 சதவீதம் மட்டுமே சிக்கலில் உள்ள சொத்துகளாக பதிவு செய்யப்பட்டது.
பொருளாதார மேதைகள் என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆட்சி செய்த காலத்தில் தலையீடுகள், பிரஷரால் வங்கி முறை சீர்குலைந்துவிட்டது.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான நாள் அன்று 80: 20 தங்கம் இறக்குமதி திட்டத்தின் கீழ் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் உள்பட 7 தனியார் நிறுவனங்களுக்கு சிதம்பரம் சலுகை அளித்துள்ளார். அதற்கு என்ன அர்த்தம்.
இது குறித்து சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். இது ஊழல் இல்லையா? எந்த ஊழல்வாதியையும் பாஜக அரசு சும்மா விடாது என்றார்.