தாவூத் கும்பலிடம் இருந்து காப்பாற்றவே சோட்டா ராஜனை கைது செய்தது இந்தியா?
மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலிடம் இருந்து சோட்டா ராஜனை பாதுகாத்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இண்டர்போல் மூலம் மத்திய அரசு கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் பதுங்கி இருந்து இந்தோனேசியாவுக்கு இடம்பெயர்ந்த போது சிக்கிவிட்டார் மும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவரான சோட்டா ராஜன். 20 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவை விட்டு தப்பி ஓடிய சோட்டா ராஜன் இப்போது இந்தோனேசியாவின் பாலி தீவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டுவர சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் மும்பை போலீசார் இந்தோனேசியா செல்ல உள்ளனர்.
மும்பையில் நிழல் உலக தாதாவாகிய கோலோச்சிய தாவூத் இப்ராகிம் நெருங்கிய நண்பராக இருந்தார் இந்த சோட்டா ராஜன். ஆனால் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பை தாவூத் கும்பல் நிகழ்த்தியதை கடுமையாக எதிர்த்தவர் சோட்டா ராஜன். இதனாலேயே இருவரும் எதிரிகளாகினர்.
பொது எதிரி தாவூத்
பின்னர் தாவூத் கும்பலைச் சேர்ந்தவர்களை வரிசையாக சோட்டா கோஷ்டி படுகொலை செய்தது. சோட்டாராஜனுக்கும் இந்தியாவுக்கும் பொதுவான எதிரி தாவூத். சோட்டா ராஜன் கேங் மூலமாகவே தாவூத் குறித்த பல தகவல்களை இந்தியா பெற்று வந்தது. இப்படி தாவூத் விவகாரத்தில் இந்தியாவின் சொத்தாக இருந்த சோட்டாராஜனை இப்போது 'தூக்கி வர' வேண்டிய அவசியம் என்ன வந்தது?
விசாரணைக்காக...
சோட்டா ராஜனிடம் தாவூத் குறித்த பல முக்கிய தகவல்கள் இருப்பதால் இந்தியாவுக்கு கொண்டு வந்து கஸ்டடியில் வைத்து விசாரிக்கலாம் என முடிவு செய்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
ஆஸி. தர்மசங்கடம்
சோட்டா ராஜன் ஆஸ்திரேலியாவில்தான் 7 ஆண்டுகாலம் மோகன் குமார் என்ற பெயரில் தலைமறைவாக இருந்தார். தாவூத் கும்பலைச் சேர்ந்த சோட்டா ஷகீல், ஆஸ்திரேலியாவில் சோட்டா ராஜன் இருப்பதை உறுதி செய்து அங்கேயே போட்டுத்தள்ள திட்டம் போட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவோ தங்களது நாட்டில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை விரும்பாததால் அவரை நாட்டை விட்டு வெளியேறச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படி வெளியேறி இந்தோனேசியா வந்தபோது சிக்கினார் என்கின்றனர்.
கண்டுபிடித்த தாவூத் கும்பல்
சோட்டா ராஜனின் இருப்பிடத்தை கடந்த ஏப்ரல்- மே மாதமே தாவூத் இப்ராகிம் கும்பல் கண்டுபிடித்துவிட்டது. அத்துடன் சோட்டா ராஜன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தகவலும் வெளியானதால் இந்தியாவுக்கு, ஆஸ்திரேலியாவுக்கும் நெருக்கடி ஏற்படுத்திய நிலையில்தான் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உளவு நிறுவனங்கள் நெருக்கடி
சோட்டா ராஜனுக்கு பாதுகாப்பளிப்பதை இந்திய உளவுத்துறை நிறுவனங்கள் விரும்பவில்லை... இந்த நெருக்கடியின் உச்சமாகத்தான் தற்போது சோட்டா பிடிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தியரி உண்டு.
ரிடையர்ட்...
நிழல் உலக வாழ்க்கையில் இருந்து சோட்டா ராஜன் ஓய்வு பெறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டார்... தனது இறுதி காலத்தை இந்திய சிறைகளில் கழிக்க முடிவு செய்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
பாதுகாப்புக்காக கைது
தாவூத்துக்கு எதிரான சொத்தாக கருதப்படும் சோட்டா ராஜனை இனியும் வெளிநாட்டில் விட்டு வைத்தால் பாதுகாக்க முடியாது; நிச்சயம் தாவூத் கோஷ்டி போட்டுத் தள்ளிவிடும். ஆகையால் பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டு வந்துவிடுவோம் என்ற மத்திய அரசின் நடவடிக்கையின் ஒருபகுதிதான் இந்த கைது டிராமா என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.