ஏன் இரவு 11 மணிக்கு நிர்பயா படம் பார்க்கப் போனார்?.. மகா. பெண்கள் ஆணைய உறுப்பினரின் சர்ச்சைப் பேச்சு
மத்திய அமைச்சர் சரத்பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவியுமான சுப்ரியே சுலேவை வைத்துக் கொண்டு அவர் பேசிய பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆஷாவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாக்பூரில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நிகழ்ச்சியில் ஆஷா பேசுகையில், உண்மையிலேயே தனது ஆண் நண்பருடன் இரவு 11 மணிக்குப் படம் பார்க்கத்தான் போனாரா நிர்பயா. அப்படி இரவு நேரத்தில் படம் பார்க்கப் போக வேண்டிய அவசியம் என்ன. ஏன் அந்த நேரத்தில் போக வேண்டும்.
மும்பை சக்தி மில்ஸ் பாலியல் பலாத்கார வழக்கைப் பாருங்கள், 6 மணிக்கு மேல்தான் அது நடந்துள்ளது. அந்த நேரத்திற்கு அந்தப் பெண் அப்படி ஒரு தனிமையான இடத்திற்கு ஏன் போனார்.
பெண்கள்தான் கவனமா்க இருக்க வேண்டும். நாம் எங்கு போகிறோம், யாருடன் போகிறோம், எதற்காக போகிறோம், உண்மையிலேயே போக வேண்டிய அவசியம் உள்ளதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
மூன்று காரணங்களால்தான் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடக்கின்றன - நமது உடைகள், நமது நடத்தை, தேவையில்லாத இடங்களுக்கு நாம் போவது.
தெரிந்தோ, தெரியாமலோ நாமே பாலியல் தாக்குதல்களை வரவழைத்துக் கொள்ள வேண்டுமா என்பதுதான் நான் பெண்களைப் பார்த்துக் கேட்கக் கூடிய கேள்வி. அதை பெண்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார் மிர்ஜே.