ஷீனாவின் கொலை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 'அவருக்கு' ஏன் 3 ஆண்டுகள் ஆனது?
மும்பை: இந்திராணி முகர்ஜி மிரட்டியதால் தான் ஷீனா மாயம் ஆனது பற்றி அவரது நெருங்கிய தோழி போலீசாரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கு குறித்து அண்மையில் போலீசாருக்கு யாரோ போன் மூலம் தகவல் தெரிவித்த பிறகே அவர்கள் விசாரணையை துவங்கி உண்மையை கண்டுபிடித்தனர். போலீசாருக்கு ஷீனாவின் தாய் இந்திராணி மற்றும் அவருடைய தற்போதைய கணவர் பீட்டர் முகர்ஜிக்கு தெரிந்த ஒருவர் தான் தகவல் கொடுத்ததாக கூறப்பட்டது.
உண்மையில் ஷீனாவின் நெருங்கிய தோழியின் கணவர் தான் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஷீனா
கவுஹாத்தியில் ஷீனாவுடன் சேர்ந்து பள்ளியில் படித்த தோழியின் கணவர் ராணுவத்தில் உள்ளார். அவர் தான் மும்பை போலீசாருக்கு போன் செய்து ஷீனாவின் கொலை பற்றி தெரிவித்துள்ளார். அவருக்கு எப்படி கொலை பற்றி தெரியும், தெரிந்திருந்தும் அவர் ஏன் இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்தார் என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்திராணி
ஷீனாவை பார்க்க அந்த தோழியும், அவரது கணவரும் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பை வந்துள்ளனர். (ஷீனாவின் தோழியின் கணவர் தற்போது மீரட்டில் பணியாற்றுகிறார்.) அது தான் அவர்கள் ஷீனாவை கடைசியாக பார்த்தது. அதன் பிறகு அந்த தம்பதி இந்திராணியை அணுகி ஷீனா பற்றி கேட்டுள்ளனர். அதற்கு இந்திராணியோ அவர்களை மிரட்டியுள்ளார்.
ராகுல்
அந்த தம்பதி ஷீனாவின் காதலர் ராகுல் முகர்ஜியிடம் கூட ஷீனா பற்றி கேட்டுள்ளனர். ஷீனாவை ராகுல் பின்தொடர்வதாக இந்திராணி போலீசில் புகார் அளித்ததால் அவர் அந்த தம்பதி கேட்டதை கண்டுகொள்ளவில்லை.
ரகசியம்
போலீசாருக்கு தகவல் தெரிவித்த தம்பதிக்கு ஷீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நிறைய விஷயம் தெரியும் என்று தற்போது மும்பையில் வசித்து வரும் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.