சாலைகளை மக்களே பராமரிக்கணுமா.. மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் சாட்டையடி
சாலை விபத்து குறித்த வழக்கில் மாநில அரசுகளை சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
Recommended Video
டெல்லி: மாநில அரசுகள் எல்லாம் என்னதான் செய்து கொண்டு இருக்கின்றன? குண்டும், குழியுமான சாலைகளை மக்களா பராமரிக்க முடியும் என்று சாலை விபத்துகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சாட்டையடி கேள்விகளைக் கேட்டுள்ளது.
குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் 3 ஆயிரத்து 597 பேர் பலியானதாக ஒரு வழக்கு கடந்த 2017-ல் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு வந்தது
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில்தான் இந்த வழக்கு போடப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகவே இது நிலுவையில் இருந்து வந்ததால், நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
ஏன் நடவடிக்கை இல்லை
அப்போது நீதிபதிகள், இந்த புள்ளி விவரங்கள் குறித்து சில மாநிலங்கள் சர்ச்சையை எழுப்புவது துரதிருஷ்டவசமானது என்றனர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள் மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில், "இவ்வளவு பேர் சாலை விபத்தில் உயிரிழந்தும் மாநில அரசுகள் ஏன் இன்னும் அதனை சரி செய்ய நடவடிக்கைகளை எடுக்கவில்லை?
யார் பராமரிப்பது?
மாநில அரசுகளால் சாலைகளை பராமரிக்க முடியாது என எப்படி சொல்ல முடியும்? சாலைகளை பராமரிக்க பணம் இல்லையென்றால் சாலைகளை போடும் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் ஏன் பணம் கொடுக்கிறீர்கள்? எல்லா சாலைகளையும் இடித்துவிட முடியுமா? மாநில அரசுகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன? யார்தான் சாலைகளை பராமரிக்கிறீர்கள்? மக்கள்தான் சாலைகளை பராமரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று சரவெடியான கேள்விகளை தொடுத்தனர் நீதிபதிகள்.
முற்றுப்புள்ளி வேண்டும்
உண்மையில் இந்தியாவில் போடப்படும் சாலைகள் ஒரு மழைக்குக் கூட தாங்காத அளவில்தான் தரம் உள்ளது. பெரு மழைக்காலங்களில் சாலைகள் அரித்துச் செல்லப்படும் சம்பவங்கள் இந்தியாவில்தான் அதிகம் இருக்கும். உச்சநீதிமன்றம் இந்த சாலை துயரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தால் நலமாக இருக்கும்.