சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறை ஏன் இவ்வளவு துடியாய் துடிக்கிறது?
- ஆர்.மணி
டெல்லி: அமலாக்கத் துறை (Enforcement Directorate) முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் சிபிஐ சிதம்பரத்தை கடந்த 23 ம் தேதி கைது செய்தது. இதே வழக்கில் அமலாக்கத் துறையும் சிதம்பரத்தை கைது செய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு 15 மாதங்களுக்கும் மேலாக டில்லி உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்த முன் ஜாமீனை கடந்த 22ம் தேதி ரத்து செய்தது டில்லி உயர்நீதிமன்றம். பின்னர் அடுத்த நாள் இரவு 9 மணியளவில் டில்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டினுள் சுவரேறி குதித்து சிபிஐ அவரை கைது செய்தது. கிட்டத் தட்ட 10 நாட்கள் சிபிஐ காவலில் இருந்து வருகிறார் சிதம்பரம். ஆகஸ்ட் 30 ம் தேதியுடன் அவரது சிபிஐ காவல் முடிவடைகிறது. மேலும் சிபிஐ காவல் சிதம்பரத்துக்கு நீட்டிக்கப் படுமா அல்லது அவர் நீதிமன்றக் காவலுக்கு மாற்றப் படுவாரா என்பது இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வரையில் தெரியவில்லை.
சிபிஐ கைதிலிருந்து தப்ப சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்த போது அதனை அவசர வழக்காக கருதி உடனே விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. சிதம்பர் கைதான அடுத்த நாள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது ஏற்கனவே அவர் கைது செய்யப் பட்டு விட்டதால் அந்த மனு காலாவதியாகிப் போனது. ஆனால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒவ்வோர் 24 மணி நேரத்துக்கும் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. கடைசியாக ஆகஸ்ட் 29 ம் தேதி சிதம்பரம் தரப்பு மற்றும் அமலாக்கத் துறையின் மனுக்களின் மீதான விசாரணையை முடித்த உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை செப்டம்பர் 5 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
அதுவரையில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5ம் தேதி வரையில் சிதம்பரத்துக்கு முன் ஜாமீனும் வழங்கியிருக்கிறது. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஐந்து நாட்கள் நடந்தது. 11 மணி நேரம் வாத, பிரதிவாதங்கள் நடந்தன. உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரு முன் ஜாமீன் மீதான விசாரணை இவ்வளவு மணி நேரம் நடந்தது என்பது கிட்டத்தட்ட இதுவரையில் இல்லாத அசாதரண மானது என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' கூறுகிறது.
சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறை ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது? இவ்வளவு தூரம் மெனக் கெடுகிறது என்பது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப் படுகிறது. யாரால் ஆச்சரியமாக பார்க்கப் படுகிறது என்றால் திருவாளர் பொது ஜனத்தால் என்று சொல்லலாம். ஆனால் பாஜக, காங்கிரஸில் உள்ள விவரம் அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்பதுதான் நிதர்சனம். அவர்கள் இதன் உண்மை காரணத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள்.
காரணம் இதுதான் ... காங்கிரஸ் கட்சியின் தற்போதய இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அந்நிய செலாவணி பரிவர்த்தனையில் ஈடுபட சிதம்பரம்தான் முழு உதவிகளை செய்திருக்கிறார் என்பதுதான் பாஜக அரசின் நிலைப்பாடு. இதனை பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி 2017 ம் ஆண்டு முதல் சொல்லி வருகிறார்.
கடந்த வாரம் சிதம்பரம் கைதானவுடன் சுவாமி வெளியிட்ட ஒரு ட்வீட்டர் செய்தியிலும் இதே கருத்தையே வலியுறுத்தி, அமலாக்கத் துறை சிதம்பரத்தை உடனே தன்னுடைய கஸ்ட டியில் எடுத்து அவரிடமிருந்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அந்நிய செலாவணி மோசடியில் இருக்கும் தொடர்பு சம்மந்தமான அனைத்து தகவல்களையும் பெற்று சோனியா மற்றும் ராகுலை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே 'நேஷனல் ஹெரால்டு' ஊழல் வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன் ஜாமீனில் இருக்கின்றனர் என்பது இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகிறது.
திங்கள் வரை காவலில் இருக்கிறேன்.. நீதிமன்றத்தில் சொன்ன ப.சிதம்பரம்.. பின்னணியில் அல்டிமேட் காரணம்!
காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் இன்றைக்கு அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரணையில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா, கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் சிவகுமார், மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் கமலநாத்தின் சகோதரி மகன் ரதுல் பூரி, சோனியா காந்தியின் தனி செயலாளர் அஹமது படேலின் மகன் ஃபைசல் படேல், சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ரா என்று பட்டியில் நீண்டு கொண்டேதான் போகிறது.
காங்கிரஸ் மட்டுமல்ல பல எதிர்கட்சி தலைவர்களும் இன்றைக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை வரம்பில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். திரிணாமூல் காங்கிரசின் மூன்று எம் பி க்கள் மீது ஊழல் வழக்குகளை தொடர சிபிஐ மத்திய அரசிடம் முறையான அனுமதியை கோரியிருக்கிறது. தேசீய வாத காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் மன்மோஐன் சிங் அரசில் சிவில் விமான துறை அமைச்சராக இருந்தவருமான பிரஃபுல் படேல், மஹாராஷ்டிராவின் நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபாரூக் அப்துல்லா என்று மேலும் நீளுகிறது இந்த பட்டியல்.
சிதம்பரத்தை பொறுத்த வரையில் அவர் மட்டுமின்றி அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவின் வழக்குகளில் சிக்கி தற்பொழுது ஜாமீன் அல்லது முன் ஜாமீனில் தான் வெளியில் உலாவிக் கொண்டிருக்கின்றனர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஒருவரின் ஒட்டு மொத்த குடும்ப மும் ஜாமீன் மற்றும் முன் ஜாமீனில் வெளியிலிருப்பது இந்தியாவை பொறுத்த வரையில் இதுவரையில் இல்லாத ஒரு கின்னஸ் ரெகார்டாக கூட இருக்கலாம் .... யாருக்குத் தெரியும்?