ஹனுமந்தப்பாவின் மன உறுதி... ஜார்ஜ் பெர்னாண்டஸைப் பாராட்ட வேண்டும்!
டெல்லி: லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா இன்று சகாப்தமாகி விட்டார். ஒட்டு மொத்த இந்தியாவும் இந்த வீரரின் உயிர்ப் போராட்டத்தை நினைவு கூர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் நமக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நினைவுக்கு வருகிறார்.
25 அடி ஆழ பனிப் பள்ளத்தில் சிக்கிய நிலையிலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் கைவிட்டு விடாமல் உயிரைக் கையில் பிடித்தபடி போராடி வந்தவர் ஹனுமந்தப்பா.
அங்கிருந்து உயிருடன் மீட்கப்பட்ட ஹனுமந்தப்பா இன்று வீர மரணமடைந்தார். ஒட்டுமொத்த இந்தியாவும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸை நாம் நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும். காரணம், சியாச்சினுக்கும், ஜார்ஜுக்கும் இடைேய அவ்வளவு நெருக்கம் இருக்கிறது.
85 வயது ஜார்ஜ்
ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு இன்று 85 வயதாகிறது. நீண்ட காலத்திற்கு முன்பே அவர் அரசியலை விட்டு விலகி விட்டார். பின்னர் உடல் நிலை சரியில்லாமல் போனது.
அதிரடியான அமைச்சர்
வாஜ்பாய் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசில் 2 முறை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இரண்டு முறையும் அட்டகாசமாக செயல்பட்டார் ஜார்ஜ்.
சியாச்சினுக்கு 30 முறை போன ஒரே அமைச்சர்
இந்திய அரசியல் தலைவர்கள் யாருமே செய்யாத சாதனையை நிகழ்த்தியவர் ஜார்ஜ். அதாவது சியாச்சின் சிகரத்திற்கு 30 முறை அவர் போயுள்ளார். சும்மா சுற்றிப் பார்க்கப் போனதில்லை அவர். மாறாக வீரர்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருவார்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை
ஆறு மாதத்திற்கு ஒருமுறை சியாச்சின் போய் விடுவார் ஜார்ஜ். அங்குள்ள நமது வீரர்களிடம் பேசி அவர்களது குறைகள், பாதுகாப்பு நிலைமை உள்ளிட்டவற்றைக் கேட்டறிவார்.
வீரர்களோடு வீரராக மாறி
வீரர்களுடன் கை குலுக்கி ஹவ் ஆர் யூ என்று கேட்பதோடு நில்லாமல், அவர்களோடு உட்கார்ந்து அவர்களிடம் உள்ள ஸ்னாக்ஸை கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொண்டு படு இயல்பாக பேசுபவர் ஜார்ஜ்.
சியாச்சின் வீரர்களின் நிலையை மாற்றியவர்
உண்மையில் முன்பு சியாச்சின் சிகரப் பகுதியில் நமது வீரர்களுக்கு பல்வேறு வசதிகள் இல்லாத நிலை இருந்தது. ஜார்ஜ் அமைச்சராக இருந்த காலத்தில்தான் பல வசதிகளைக் கொண்டு வந்தார். வீரர்கள் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் ஜார்ஜ்.
நவீன உயிர் காப்புக் கருவிகள்
அங்குள்ள வீரர்களுக்கு நவீன உயிர் காப்புக் கருவிகள் உள்ளிட்டவை வரவழைத்துக் கொடுத்து நமது வீரர்களின் நலனை மேம்படுத்தியவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
ஹனுமந்தப்பாவின் 6 நாள் போராட்டம்
தற்போது ஹனுமந்தப்பா 6 நாள் பனிச் சிகரப் பள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடியுள்ளார். உண்மையில் இத்தனை நாள் அவர் உயிருடன் இருக்க ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூட ஒரு உத்வேமாக இருந்திருக்கலாம்.
சியாச்சின் வீரர்களில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கும் தனி இடம் உண்டு என்று சொல்வதில் தவறே இல்லை.
அப்துல் கலாம்
சியாச்சினுக்கு இந்தியத் தலைவர்கள் அதிக அளவில் சென்றதில்லை. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சியாச்சினுக்கு விஜயம் செய்து புதிய வரலாறு படைத்தார். இந்திய குடியரசுத் தலைவர்கள் யாரும் சியாச்சினுக்கு வந்ததில்லை. கலாம்தான் முதல் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிகக் கடுமையான குளிர்காலத்தின்போது கலாம் சியாச்சினுக்குச் சென்றார் என்பது முக்கியமானது.
2005ல் மன்மோகன் சிங்
2005ம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சியாச்சின் சிகரத்திற்குச் சென்று அங்கு படை வீரர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
2014ல் போன மோடி
அதேபோல 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சியாச்சின் சிகரத்திற்கு பயணம் செய்தார். தீபாவளி தினத்தன்று அவர் சியாச்சின் சென்று நமது வீரர்களைச் சந்தித்து உரையாடினார்.