மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் துப்பாக்கி ஏன் கொடுத்தார்கள்?: பிஎஸ்எப் வீரரின் மனைவி கேள்வி
சன்டிகர்: மனநிலை பாதிக்கப்பட்டவர் கையில் எதற்காக துப்பாக்கியை கொடுத்தார்கள் என்று உணவு புகார் வீடியோ வெளியிட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடுங்குளிரில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் வீடியோ மூலம் ஃபேஸ்புக்கில் புகார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் பகதூர் ஒரு குடிகாரர் என்றும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பகதூரின் மனைவி ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் கணவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் நாட்டின் முக்கிய பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை ஏன் அவரிடம் கொடுத்தார்கள், அவர் கையில் ஏன் துப்பாக்கியை அளித்தார்கள்?
என் கணவர் மேலும் 5 ஆண்டுகள் பணியில் இருக்க விரும்புகிறார். ஆனால் அதிகாரிகளோ வரும் 31ம் தேதியுடன் நீங்கள் 20 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்கிறீர்கள், அத்துடன் விருப்ப ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்துகிறார்கள் என்றார்.