நான் ஏழை.. அதனால்தான் ராகுல் கண்ணைப் பார்க்க பயப்படுகிறேன்.. மோடி!
டெல்லி: ராகுல் காந்தி கண்களை பார்க்க நான் தயங்குகிறேன். உண்மைதான். காரணம் ஏழை.. அது மட்டுமா, காங்கிரஸின் கண்களைப் பார்த்த பலரின் கதி என்ன என்பது நாடறியும் என்று பிரதமர் மோடி பேசினார்.
லோக்சபாவில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மோடி இன்று இரவு பேசினார். அவரது உரையில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். தனது அரசின் சாதனைகளையும் எடுத்து வைத்தார்.
காலையில் ராகுல் காந்தி பேசும்போது, எனது கண்களைப் பார்க்க பிரதமர் பயப்படுகிறார். அவர் உண்மையாக இல்லை. அதனால்தான் பயப்படுகிறார் என்று விமர்சித்திருந்தார். அதற்கு தனது உரையின்போது பதிலளித்தார் மோடி.
மோடி கூறுகையில், ராகுல் காந்தியின் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லை. உண்மைதான். காரணம் நான் ஒரு ஏழை. எனவேதான் தைரியம் இல்லை.
காங்கிரஸ் கண்களை பார்த்து பேசியவர்கள் நிலை என்ன ஆனது என்று தெரியும். ஜெயப்பிரகாஷ் நாராயணன் பார்த்தார், பிரணாப் முகர்ஜி பார்த்தார். அவர்களின் நிலை நாடறியும்.
காங்கிரஸின் கண்களைப் பார்த்தவர்கள் எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்பட்டார்கள் என்பதை நாடறியும். நாங்கள் நாட்டின் பணியாளர்கள், நீங்கள் (காங்கிரஸ்) நாட்டை விற்பவர்கள். ராகுலின் கண்கள் என்ன செய்யும் என்பதை இந்த நாடே இன்று பார்த்துவிட்டது என்றார் மோடி.