இந்தியாவுக்கு நம்பிக்கை தராத சி.ஐ.ஏ.வின் உளவுத் தகவல்கள்!
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா உளவுத் துறை (சிஐஏ) தகவல் கொடுத்ததாக கூறி வருவதை தொடர்ந்து இந்தியா நிராகரித்து வருகிறது. அமெரிக்காவின் உளவுத் துறை தகவல்கள் போதுமானதாகவும் அல்ல.
அமெரிக்கா தரும் பல தகவல்கள் ஏற்கெனவே இந்தியாவுக்கு கிடைத்த தகவல்களாகத்தான் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. மும்பை தாக்குதல் குறித்து புத்தகம் எழுதிய சரோஜ்குமார் ரத், அமெரிக்காவின் சிஐஏ தரும் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை கவனமுடன் சரிபார்க்க வேண்டியதிருக்கிறது என்கிறார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் விலகிக் கொண்டபின்னர் அந்த இடத்துக்கு இந்தியாவை தள்ளிவிடும் உள்நோக்கத்துடனேயே சி.ஐ.ஏ.- மற்றும் இங்கிலாந்தின் எம்16 உளவு அமைப்பின் தகவல்கள் இருக்கின்றன. இந்த நாடுகளைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தானில் இந்தியா அதிக அளவில் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறது. அதனை நோக்கி தள்ளிவிடும் வகையில்தான் உளவு தகவல்களையும் இந்த நாடுகள் கொடுத்து வருகின்றன.
ஹபீஸ் சயீத் தனித்து செயல்படக் கூடியவன் அல்ல...அமெரிக்காவோ பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு சயீத்துக்கு இல்லை என்று உளவுத் தகவல் தருகிறது..
இப்படி சொல்லி பாகிஸ்தான் ராணுவத்தை பாதுகாப்பதுடன் சயீத்தை இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் உருவாக்க முயற்சிக்கிறது அமெரிக்கா.
பாகிஸ்தான் ராணுவத்தைப் பொறுத்தவரை அது தெஹ்ரிக் இ தலிபானுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் லஷ்கர் இ தொப்யாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தப் போவதில்லை.
ஏனெனில் இந்தியாவில் ரத்த களறியை உருவாக்க நினைப்பது பாகிஸ்தான் ராணுவம். அதற்கு லஷ்கர் இயக்கம் தேவை.
மும்பை தாக்குதல் வழக்கில் ஓராண்டுக்குப் பின்னர்தான் ஹெட்லியை அமெரிக்கா கைது செய்தது. அமெரிக்காவுக்கு மும்பை தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரியும். ஆனால் இந்தியாவுக்கு ஹெட்லி பற்றி எந்த ஒரு உருப்படியான தகவலையும் அமெரிக்கா தரவில்லை.
அதேபோல் ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் மீதான தாக்குதல் வழக்கில் சிக்கிய சகாபுதீன் அகமதுவிடம் நடத்திய விசாரணையின் போது, கடல்வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த இருப்பதை நமது உளவுத்துறையினரும் தெரிந்து கொண்டனர். மாறாக அமெரிக்காவின் சிஐஏவுடன் இணைந்து செயல்பட்டு தகவலைப் பெறவில்லை.
இதனாலேயே அமெரிக்காவின் சிஐஏ தரும் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டியதிருக்கிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.