இந்தியா வர விண்ணப்பித்த 17,000 பாகிஸ்தானியருக்கு விசா மறுப்பு
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வர விண்ணப்பித்தவர்களில் கடந்த 5 மதங்களில் மட்டும் 17,581 விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வர விரும்பி ஆயிரக்கணக்கானோர் விசா விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அவைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 53 சதவீத விசா விண்ணப்பங்கள் இந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளை பொறுத்தவரை இது தான் அதிக அளவில் நிராகரிக்கப்பட்டதாகும். 2014-ம் ஆண்டு 17 சதவீத விசா விண்ணப்பங்களும், 2015-ம் ஆண்டு 25 சதவீத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சிக்கலில் இருநாட்டு மக்கள்
பாகிஸ்தானில் இருக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்களை பார்க்க வேண்டும் என்பதற்காக இந்தியா வர முயற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்களது விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் தங்களது உறவினர்களை சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஆலோசனை
பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பாம்பாவால், இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மெக்ரிஷியிடம் விளக்கம் கேட்டிருந்தார். மேலும் நம்பத்தகுந்த விண்ணப்பங்கள் இருந்தால் அவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பதான்கோட் எதிரொலி?
பதான் கோட் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், இருநாடுகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதுதான் இத்தகைய விசா மறுப்புக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அதிகமாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தலாம் எனவும் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்கள் நிராகரிப்பு
கடந்த மே 31-ந் தேதி வரை மொத்தம் 33,191 விண்ணப்பகள் பெறப்பட்டுள்ள. அவற்றில் 17,581 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள. பதான்கோட் தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதம் 75 பேர் ஆக்ரா அருகில் உள்ள புனித தலத்திற்கு வருவதற்காக பாகிஸ்தானில் இருந்து விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டடு, அவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
விசா கொள்கை எங்கே?
கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே விசா கொள்கையை தளர்த்துவது குறித்து ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. அதில் இரு நாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிப்பது மற்றும் இருநாட்டு மக்களும் சந்திப்பதை எளிதாக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் இருந்தது நினைவிருக்கலாம்.
5 ஆண்டு கால விசா
தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் பாகிஸ்தானியர்களுக்கு நீண்ட நாள் விசா வழக்கப்பட்டது. அதாவது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் 5 ஆண்டு காலம் அந்த விசா மூலம் இந்தியாவில் வசிக்க முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த ஒரு வருடத்திற்குள் அண்டை நாட்டில் இருந்து வந்த 4000 ஹிந்து மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.