இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் அரசியல் வாழ்க்கையை வீழ்த்திய "காதல்" ... பரபர பின்னணி
மணிப்பூரின் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா தேர்தலில் வீழ்த்தப்பட்டு அரசியலை விட்டே விலகி நேரிட்டதன் பின்னணியில் அதிர வைக்கும் காரணங்கள் இருக்கின்றன.
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் மனித உரிமை போராளியான இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று பரிதாப தோல்வியைத் தழுவியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரோமின் காதல், தொகுதி தேர்வு உள்ளிட்டவை அவரது இந்த பரிதாப தோல்விக்கும் அரசியலுக்கு முழுக்கு போடுவதற்கும் காரணம் என்கின்றன மணிப்பூர் தகவல்கள்.
மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா. அண்மையில் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு அரசியல் பிரவேசம் செய்தார்.
தற்போது நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து தெளபால் தொகுதியில் போட்டியிட்டார் இரோம் ஷர்மிளா. ஆனால் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் கூட இரோம் ஷர்மிளாவுக்கு கிடைக்கவில்லை. மொத்தமே 90 வாக்குகள்தான் இரோம் ஷர்மிளாவுக்கு கிடைத்தது நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அடியோடு நிராகரிப்பு
எந்த மக்களுக்காக இரோம் ஷர்மிளா போராடினாரே அதே மக்கள்தான் அவரை ஒட்டுமொத்தமாக நிராகரித்து பரிதவிக்க விட்டுவிட்டனர். நேற்று வரை தங்களது சொந்த மகளாக நினைத்து கொண்டாடிய மணிப்பூர் மக்களுக்கு இரோம் ஷர்மிளா மீது அப்படி என்ன கோபம்?
தொகுதி தேர்வு தவறு
அடிப்படையில் இரோம் ஷர்மிளா தேர்ந்தெடுத்த தொகுதிதான் இந்த நிராகரிப்புக்கு காரணம். தெளபால் தொகுதி என்பது முதல்வர் இபோபி சிங்கின் பலமான கோட்டை. தலைநகர் இம்பாலை அடுத்து இருக்கும் தெளபால் பகுதிக்கு தமது ஆட்சிக் காலத்தில் அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவியவர் இபோபிசிங்.
இதுதான் நடக்கும்...
ஆகையால் அவரை அத்தொகுதி மக்கள் ஒரு தெய்வமாக கொண்டாடி வருகின்றனர். மணிப்பூரி மக்கள் மட்டுமின்றி அத்தொகுதியில் உள்ள கணிசமான இஸ்லாமியர் வாக்குகளும் அப்படியே இபோபிசிங்குக்கு கிடைத்திருக்கிறது. இரோம் ஷர்மிளா இத்தொகுதியில் போட்டியிடுவேன் என அறிவித்த போதே அவருக்கு 1000 ஓட்டுகள்தான் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்..இவ்வளவு மோசமான தோல்வியை எதிர்பார்க்கவில்லை என்கிறார் மணிப்பூரின் மோரேவில் வாழும் தமிழரான பத்திரிகையாளர் காஜா மொய்தீன்.
சொந்த தொகுதியில்...
இரோம் ஷர்மிளா தம்முடைய சொந்த தொகுதியில் நின்றிருந்தால்கூட நிச்சயம் வெல்லக் கூடிய வாய்ப்பும் இருந்திருக்கும். ஆனால் தெளபால் தொகுதியை தேர்வு செய்து தம்முடைய அரசியல் வாழ்க்கைக்கு அவரே முடிவுரை எழுதிவிட்டார் என்பதே யதார்த்தம்.
அரசியலே வேண்டாம்
அதேபோல் இரோம் ஷர்மிளாவை ஒரு போராளியாக மட்டுமே மணிப்பூர் மக்கள் அங்கீகரித்தனர். இரோம் ஷர்மிளா தங்களுடைய உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்பதுதான் அம்மாநில மக்களின் விருப்பம். அதனால்தான் அவர் அரசியலில் நுழைவதாக அறிவித்தபோதே குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருமே மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இரோம் ஷர்மிளாவை ஒரு அரசியல்வாதியாக தாங்கள் ஏற்கவில்லை என்பதையும் இத்தேர்தலில் நிரூபித்திருக்கின்றனர் மணிப்பூர் மக்கள்.
இரோமின் காதல்
இரோம் ஷர்மிளாவை மணிப்பூர் மக்கள் நிராகரிக்க மற்றுமொரு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவரது காதல்தான்.. கோவா வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து என்.ஆர்.ஐ. ஒருவரை இரோம் ஷர்மிளா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
கையாண்ட விதம்
அவரது நுழைவை இரோம் ஷர்மிளா ஆதரவாளர்கள் தொடக்கம் முதலே நிராகரித்தனர். இரோமின் காதலரும் ஆதரவாளர்களை கையாண்ட விதம் கைகலப்பில் எல்லாம் முடிந்து காவல்நிலையம் வரை போயுள்ளது. சமூக வலைதளங்களிலும் கூட இரோமின் ஆதரவாளர்களை இழிவாக பேசி அதிருப்தியை சம்பாதிக்க வைத்திருக்கிறார்.
அரசியலில் இருந்து விலகல்
இதற்காக இரோம் ஷர்மிளா ஆதரவாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நிகழ்வுகளும் உண்டு. இரோம் ஷர்மிளாவையும் ஆதரவாளர்களையும் பிரித்த காதலும் அவரது தேர்தல் தோல்விக்கும் அரசியல் வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இப்போது இரோம் ஷர்மிளா ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.